மீண்டும் இந்தியாவுக்கு வரும் கோஹினூர் வைரம்! அமெரிக்காவிலிருந்து எழுந்த குரல்! பிரிட்டன் ஷாக்
லண்டன்: இந்தியாவின் சொத்துக்களில் ஒன்றான கோஹினூர் வைரம், தற்போது பிரிட்டனில் அரசு குடும்ப சொத்தாக இருக்கிறது. இதனை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பலரும் கூறி வரும் நிலையில், அமெரிக்காவிலிருந்து நமக்காக ஆதரவு குரல் எழுந்திருக்கிறது.
நியூயார்க் மேயர் மம்தானி, பிரிட்டன் அரசரை தனியாக சந்திக்க நேர்ந்தால், கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க வலியுறுத்துவேன் என்று கூறியிருக்கிறார்.

நியூயார்க் மேயர்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நியூயார்க் மேயர் மம்தானி, செப்டம்பர் 11 தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பிரிட்டன் அரசரைச் சந்திப்பதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அரசரைத் தனிப்பட்ட முறையில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் திருப்பித் தருமாறு அவரிடம் வலியுறுத்துவேன் என்று மம்தானி தெரிவித்தார்.
இருப்பினும், பொது நிகழ்வில் அவர்கள் இருவரும் கைகுலுக்கிக் கொண்டபோது இந்த விவகாரம் பேசப்பட்டதா என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகவில்லை.
கோஹினூர் வைரம்
கோஹினூர் என்றால் பாரசீக மொழியில் ஒளியின் மலை என்று பொருள். இந்த வைரம் இந்தியாவின் கோல்கொண்டா சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்டது. பல நூற்றாண்டுகளாக முகலாய இளவரசர்கள், ஈரானிய வீரர்கள், ஆப்கானிய ஆட்சியாளர்கள் மற்றும் பஞ்சாப் மகாராஜாக்கள் எனப் பலரின் கைகளைத் தாண்டி இறுதியாக ஆங்கிலேயர் வசம் சென்றது.
பிரிட்டன் கைக்கு போன வைரம்
இது ஆங்கிலேயர்களின் கைகளுக்கு சென்றது வித்தியாசமான கதை. அதாவது, 1849-ல் ஆங்கிலோ-சீக்கிய போரின் முடிவில், மகாராஜா துலீப் சிங் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி இது பிரிட்டிஷாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது மகாராஜா துலீப் சிங்குக்கு வயது வெறும் 10தான். அப்படியெனில், இந்த வைரம் எப்படி கைமாறியிருக்கும் என்று சிந்தித்து பாருங்கள். இந்த வைரம் யார் கையில் இருக்கிறதோ, அவர்கள்தான் இந்த உலகத்தை ஆள்வார்கள் என்பது நம்பிக்கை.
பட்டை தீட்டப்பட்ட வைரம்
பிரிட்டன் கொண்டு செல்லப்பட்ட இந்த வைரம் பெரிய அளவில் மக்களை ஈர்க்கவில்லை. எனவே இது பட்டை தீட்டப்பட்டு சைஸ் குறைக்கப்பட்டது. இப்போது வெறும் ஒரு கோழி முட்டை சைஸில்தான் இந்த வைரம் இருக்கிறது. 186 காரட்டிலிருந்து 105 காரட்டாக, சுமார் 40% இதன் சைஸ் சுருக்கப்பட்டது. தற்போது இந்த வைரம் அரசி எலிசபெத்தின் கிரீடத்தில் பதிக்கப்பட்டு, லண்டன் கோபுரத்தில் உள்ள அரச குடும்பத்து நகைகளின் ஒரு பகுதியாக உள்ளது.
கோரிக்கையை நிராகரித்த பிரிட்டன்
இந்த வைரம் தங்கள் நாட்டின் வரலாற்று வேர்களுடன் தொடர்புடைய கலைப்படைப்பு என்பதால், அதைத் திருப்பித் தர வேண்டும் என்று இந்தியா பலமுறை கோரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும், 2013-ல் அப்போதைய இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், இந்த வைரத்தைத் திருப்பித் தருவது புத்திசாலித்தனமான காரியம் அல்ல என்று கூறி இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தார்.
பிரிட்டனுக்கு இது வரலாற்று பொக்கிஷம். ஆனால் நம்மை பொறுத்தவரை இது அடிமைத்தனத்தின் அடையாளம். இப்படி இருக்கையில், நமக்காக அமெரிக்காவிலிருந்து மம்தானி குரல் கொடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications