பாலியல் புகாரில் சிக்கிய நித்யானந்தாவை தீபாவளி விருந்துக்கு அழைப்பு.. சிக்கலில் இரு எம்பிக்கள்!
லண்டன்: பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவாக உள்ள நித்யானந்தாவை இங்கிலாந்து எம்பிக்கள் தீபாவளி விருந்துக்கு அழைத்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு - மைசூரு சாலையில் பிடதியில் ஆசிரமம் உள்ளது. இது நித்யானந்தா தியான பீடம் என்று அழைக்கப்படுகிறது. இவர் மீது பாலியல் புகார் உள்பட ஆட்கடத்தல் உள்ளிட்ட புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில் கர்நாடகா போலீஸாரால் பதிவு செய்யப்பட்ட பாலியல் புகார் ஒன்றில் சிக்கிய நித்யானந்தா கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறி இன்னும் தலைமறைவாகவே உள்ளார்.

தீவை விலைக்கு வாங்கிய நித்யானந்தா
அவர் தற்போது எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. கைலாசா என்ற ஒரு தீவை விலைக்கு வாங்கி அங்கு நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இவர் சமாதி நிலையில் இருந்தார்.

மருத்துவர்கள் கண்காணிப்பு
இவர் நிறைய மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் இருந்ததாக அவரது அதிகாரப்பூர்வமான பேஸ்புக் பக்கத்தில் வெளியாகியிருந்தது. மேலும் தன்னால் ஒரு இட்லியை கூட சாப்பிட முடியவில்லை என்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நித்யானந்தா சத்சங்கத்திற்காக லைவில் தோன்றியே பல மாதங்கள் ஆகிவிட்டன.

உடல்நலம்
இதனால் அவரது உடல்நிலை இன்னமும் சரியாகவில்லை என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த அப்சர்வர் எனும் நாளிதழ் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் பாப் பிளாக் மேன் மற்றும் பாகிஸ்தானில் பிறந்து பிரிட்டனில் தொழிலதிபராக இருக்கும் ரமிந்தர் சிங் ரேஞ்சர் ஆகியோர் இணைந்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மேல் சபையில் இந்தாண்டு நடந்த தீபாவளி விருந்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க நித்யானந்தாவுக்கு அழைப்பு விடுத்தனர்.

விருந்தில் நித்யானந்தா
இதனை ஏற்று நித்யானந்தாவுக்கு பதிலாக அவர் சார்பில் நித்ய ஆத்மயானந்தா இந்த விருந்தில் கலந்து கொண்டார். இந்த விருந்திற்கு முன்பு நித்யானந்தா அமைப்பில் சார்பில் விளம்பரங்களும் வெளியிடப்பட்டன. அவை விருந்தில் பங்கேற்றவர்களுக்கும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. பாலியல் வழக்கில் சிக்கி இந்தியாவிலிருந்து தப்பி தலைமறைவாக இருக்கும் ஒருவரை விருந்துக்கு அழைத்தது தொடர்பாக கன்சர்வட்டிவ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொய்யான கருத்துகள்
இந்த நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த நித்யானந்தாவின் வழக்கறிஞர் ரிச்சர்ட் ரோஜர்ஸ் இந்த சம்பவத்தை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் இந்த செய்தி பொய்யான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது. ஆதாரமற்ற வகையில் நித்யானந்தா குறித்து இவ்வாறு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அவரை குறி வைதது மத துவேஷத்தின் வெளிப்பாடாக பொய்யான கருத்துகள் பரபரப்படுகின்றன என்றார்.












Click it and Unblock the Notifications