திடீரென Purple நிறத்தில் மாறிய.. எலிசபத் மகாராணியின் கைகள்.. புயலைக் கிளப்பிய ஒற்றை படம்? பரபர தகவல்
லண்டன்: கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான எலிசபெத் மகாராணியின் போட்டோவில் அவரது கைகள் ஊதா (பர்ப்பிள்) நிறத்தில் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, அவரது உடல்நிலை குறித்துப் பல தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இது சர்ச்சையை அதிகப்படுத்தியுள்ளது.
எலிசபெத் மகாராணிக்கு தற்போது 95 வயது ஆகிறது. வயது மூப்பு காரணமாகக் கடந்த சில மாதங்களாகவே உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார்.
இதனால் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதையே அவர் வெகுவாக குறைந்திருந்தார். முக்கியமான நிகழ்வுகளில் மட்டுமே அவர் கலந்து கொண்டு வருகிறார்.
Zoom -ல் வகுப்பு; Room -ல் தேர்வா? மாணவர்களிடம் அரசு பிடிவாதம் பிடிக்கக் கூடாது; கேப்டன் அட்வைஸ்!
எலிசபெத் மகாராணி உடல்நிலை
கடந்த மாதம் லண்டன் மருத்துவமனையில் வழக்கமான சோதனைக்குச் சென்ற எலிசபெத் மகாராணி ஒரு நாள் மருத்துவமனையிலேயே அட்மிட் ஆனார். அப்போது அவர் நினைவிழந்து விட்டதாக எல்லாம் இணையத்தில் தகவல் பரவ தொடங்கியது. இருப்பினும், வழக்கமான மருத்துவ சோதனைகளுக்காகவே அவர் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது. மறுநாளே அவர் பக்கிங்காம் அரண்மனைக்குத் திரும்பினார்.
ஓய்வில் எலிசபெத் மகாராணி
இருப்பினும், உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இரண்டு வாரங்கள் தீவிர ஓய்வில் இருக்கும்படி எலிசபெத் மகாராணியை மருத்துவர்களின் அறிவுறுத்தினர். இதனால் கிளாஸ்கோவில் நடந்த பருவநிலை மாநாட்டிலும் கூட அவர் கலந்துகொள்ளவில்லை. உலகப் போர்களில் பிரிட்டன் நாட்டிற்காகப் போராடியவர்களை நினைவுகூரும் வகையில் நடைபெறும் ரிமெம்பிரன்ஸ் சன்டே என்ற நிகழ்வில் எலிசபெத் மகாராணி கலந்துகொள்வார் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் கடுமையான முதுகு வலி காரணமாகக் கடைசி நேரத்தில் அவர் பங்கேற்கவில்லை.
புதிய போட்டோ
இதனிடையே நேற்று பிரிட்டன் தலைமை தளபதி சர் நிக் கார்டரை வின்ட்சர் அரண்மனையில் எலிசபெத் மகாராணி சந்தித்துப் பேசினார். இது தொடர்பான படமும் இணையத்தில் வெளியிடப்பட்டது. இது அவரது உடல்நிலை முன்னேறி வருவதைக் காட்டுகிறது. அந்த படத்தில் தளபதி சர் நிக் கார்டரை வின்ட்சர் உடன் எலிசபெத் மகாராணி நின்றபடியே உரையாடுகிறார். அவரது உடல்நிலை தேறி வருவதாக இணையத்தில் பலரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தத் தொடங்கினர்,
பர்ப்பிள் நிறம்
இருப்பினும், சிலர் எலிசபெத் மகாராணியின் கைகள் பர்ப்பிள் (purple) நிறத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டி ட்வீட் செய்து வருகின்றனர். எலிசபெத் மகாராணியின் உடல்நிலை இன்னும் முழுவதுமாக சீராகவில்லை என்றும் அவர் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும் என்றும் ட்விட்டரில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
என்ன காரணம்
எலிசபெத் மகாராணியின் கைகள் ஏன் பர்ப்பிள் நிறத்தில் உள்ளது என்பது குறித்து மருத்துவர் ஜெய் வர்மா கூறுகையில், "raynaud's phenomenon எனப்படும் கை விரல்களுக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறைந்திருக்கலாம். அல்லது அவரது கைகள் மிகவும் குளிர்ச்சியாக இருந்து இருக்கலாம். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்துள்ளதையே பர்ப்பிள் நிறம் காட்டுகிறது. ரத்த ஓட்டம் குறைவது, பலவீனமான தோல், வெளிப்படும் நரம்புகள், தோலுக்கு அடியில் உள்ள திசுக்களில் ரத்தம் கசிவு போன்றவற்றாலும்கூட கைகள் இந்த நிறத்தில் மாறும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
முதல்முறை இல்லை
முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டிலும் கூட ஜோர்டான் அரச குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்கும் போது வெளியான படங்களிலும் கூட எலிசபெத் மகாராணியின் கைகள் பர்ப்பிள் நிறத்திலேயே இருந்தன. அப்போது இது குறித்து பலரும் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
வயதான மன்னர்
பிரிட்டனின் மிக நீண்ட காலம் உயிர் வாழும் மற்றும் நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரான எலிசபெத் உள்ளார். அடுத்த ஆண்டு வந்தால் எலிசபெத் மகாராணி அரியணை ஏற்று 70 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதற்காக வைரவிழா கொண்டாட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதேநேரம் வயது மூப்பு காரணமாக எலிசபெத் மகாராணியின் உடல்நிலை பாதிக்கப்படலாம் என்பதால் அவர் முடிந்தவரை ஓய்வில் இருக்க வேண்டும் எனப் பிரிட்டன் மக்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.