இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற கேப்டன் டாம் மூர் கொரோனாவிற்கு பலி - இங்கிலாந்து ராணி இரங்கல்
இரண்டாம் உலகப் போரில் பங்கெடுத்த கேப்டன் டாம் மூர் மறைவுக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத், பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
லண்டன்: இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரரான கேப்டன் டாம் மூர், கொரோனா தொற்று தாக்கியதால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். 100 வயதான டாம் மூர் கொரோனா நிதியாக பல லட்சம் வசூலித்து கொடுத்துள்ளார். டாம் மூரின் குடும்பத்தினருக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
கொரோனா பேரிடர் காலத்தில் முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கு நிதி திரட்டுவதற்காக தனது தோட்டத்தில் ஊன்றுகோலின் உதவியோடு 100 சுற்றுகள் நடந்து அதனை வீடியோவாக வெளியிட்டதன் மூலம் 53 மில்லியன் டாலர்கள் நன்கொடை வசூலித்து சாதனை படைத்தார்.

கடந்த 5 வருடங்களாக புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த டாம் மூர், கடந்த ஜனவரி 22ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நிமோனியா தொற்றும் ஏற்பட்டு உடல்நிலை மோசமானது.
உடல்நிலை மேலும் மோசமடையவே கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார். இதனையடுத்து அவரது குடும்பத்திற்கு இங்கிலாந்து ராணி எலிசபெத், பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இரங்கல் செய்தியில், டாம் மூர் ஒரு ஹீரோ. உலகத்திற்கே நம்பிக்கையின் சின்னமாக விளங்கியவர் என தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து ராணி எலிசபெத், அரச குடும்பத்தின் சார்பில் டாம் மூரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இவரது மறைவுக்கு அமெரிக்காவின் வெள்ளை மாளிகை சார்பில் இரங்கல் செய்தி வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகப்போரில் வென்று நூற்றாண்டுகள் வாழ்ந்த கேப்டன் டாம் மூர் கொரோனா பேரிடர் காலத்தில் நிதி வசூலித்துக்கொடுத்துள்ளார். கொரோனா தொற்று தாக்கியதில் வயது மூப்புடன் இணை நோய்களும் இருந்த காரணத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார்.












Click it and Unblock the Notifications