விக்கிலீக்ஸின் ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஜாமீன் வழங்கப் பிரிட்டன் நீதிமன்றம் மறுப்பு
லண்டன்: விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஜாமீன் வழங்கப் பிரிட்டன் நீதிமன்றம் மறுத்துள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட பல முக்கிய நாடுகளின் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், ஊழல்கள் என அரசின் உட்சபட்ச ஆவணங்களைத் தனது விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே.
தற்போது லண்டன் சிறையில் உள்ள தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று லண்டன் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
சிறையிலிருந்து வெளியேறிய பின், அவர் தலைமறைவாக அதிக வாய்ப்புகள் இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கப்படமாட்டாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, ஜூலியன் அசாஞ்சே மீது தங்கள் நாட்டில் பல வழக்குகள் உள்ளதால், அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பிரிட்டன் நீதிமன்றத்தில் அமெரிக்கா வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த தடை என லண்டன் நீதிமன்றம் தடை விதித்தது. இருப்பினும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது.
ஜாமீன் குறித்த வழக்கில் லண்டன் நீதிபதி, "நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் அமெரிக்கா மேல் முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. இந்தச்சூழ்நிலையில், நாங்கள் ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஜாமீன் வழங்கி அவர் தலைமறைவாகிவிட்டால், மேல் முறையீடு செய்தும் அமெரிக்காவுக்குப் பயனில்லாமல் போகிவிடும்" என்றார்.
இந்த ஜாமீன் தொடர்பான வழக்கில் அமெரிக்க அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஜாமீன் வழங்குவதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தார். ஜூலியன் அசாஞ்சே தப்பிக்க எந்த எல்லை வரை செல்வார் என்றும் அதற்கு அவரது கடந்தகால வரலாறே சாட்சி என்றும் தெரிவித்தார்.
ஜூலியன் அசாஞ்சே மீது அமெரிக்காவில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படும்பட்சத்தில், அவருக்கு 175 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும்.