கொரோனா 3ஆம் அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம்.. பிரிட்டன் ஆய்வாளர்கள் வார்னிங்.. காரணம் என்ன
லண்டன்: இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B 1.617.2 டெல்டா வகை கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் கொரோனா 3ஆம் அலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இதனால் ஊரடங்கில் தளர்வுகளை அறிவிப்பதற்கு முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வல்லுநர்கள் பிரிட்டனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகப் பிரிட்டன் உள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் பிரிட்டன் நாட்டில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா, அங்கு வைரஸ் பரவலை மீண்டும் அதிகரித்தது.
இதன் காரணமாகப் பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தற்போது வரை தொடர்கிறது.

ஊரடங்கில் தளர்வுகள்
நாட்டில் இருக்கும் ஊரடங்கில் தளர்வுகளை அறிவிப்பது குறித்து வரும் ஜூன் 21ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என அந்நாடு அறிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா 3ஆம் அலை வாய்ப்புள்ளதால் பொறுமையாக முடிவெடுக்க வேண்டும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரவி குப்தா தெரிவித்துள்ளார்.

தள்ளி வைக்கலாம்
இது குறித்து அவர் கூறுகையில், "பிரிட்டன் நாட்டில் கொரோனா பரவல் வேகம் குறைவாகவே உள்ளது. ஆனால், கடந்த சில நாட்களாக இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B 1.617.2 டெல்டா வகை கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. எனவே, அதிகளவில் தடுப்பூசிகளைச் செலுத்த ஏதுவாக, தளர்வுகளை அறிவிப்பை சில வாரங்கள் வரை தள்ளி வைக்க வேண்டும். கொரோனா வைரஸை தடுப்பூசிகள் மூலம் கட்டுப்படுத்தும் நிலையிலிருந்து நாம் வெகு தொலைவில் இல்லை. எனவே. சில வாரத் தாமதத்திற்குப் பிறகு தளர்வுகளை அறிவிப்பதே சிறப்பானதாக இருக்கும்" என்றும் அவர் கூறினார்.

கொரோனா 3ஆம் அலை
கொரோனா வைரசின் அடுத்த அலை பிரிட்டன் ஏற்படுவது குறித்துப் பேசிய அவர், "நாட்டில் தற்போது ஒப்பீட்டளவில் குறைந்த அளவிலேயே கொரோனா உறுதி செய்யப்படுகிறது. ஆனால், அனைத்து கொரோனா அலைகளும் முதலில் குறைந்த பாதிப்புடனேயே தொடங்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. எனவே, நிலைமை கட்டுப்படுத்த முடியாமல் செல்வதற்குள் தேவையான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

புதிய வகை புதிய சிக்கல்
இது குறித்து பிரிட்டன் நாட்டின் அவசர நிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான பேராசிரியர் சர் மார்க் வால்போர்ட் கூறுகையில், "இது புதிய வகை கொரோனா. இது சில புதிய பிரச்சினைகளை உருவாக்கலாம். இப்போதே இதை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் கொரோனா தீவிரமாவதை நம்மால் தடுக்க முடியும். ஊரடங்கில் தளர்வுகளைச் சற்று தாமதமாக அறிவிப்பதே சிறப்பானதாக இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

எச்சரிக்கை தேவை
பிரிட்டன் நாட்டில் திங்கள்கிழமை 3,383 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 23,418 பேருக்குப் பிரிட்டனில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் 28.8% அதிகமாகும். இப்படி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது, கொரோனா 3ஆம் அலை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதையே உணர்த்துவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications