"2 நாள்தான் ஆச்சு.!" அதுக்குள்ள இப்படியா! ராணி எலிசபெத் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி எது தெரியுமா
லண்டன்: பிரிட்டன் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் நேற்று காலமான நிலையில், அவர் அதற்கு சில நாட்கள் முன்பு தான் கடைசியாக பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் மகாராணியாக இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர் இரண்டாம் எலிசபெத். இவர் சுமார் 70 ஆண்டுகள் பிரிட்டன் ராணியாக இருந்தவர் ஆவர்.
கடந்த சில காலமாகவே இவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தே வந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் முதலே இவர் நிற்கவும் நடக்கவும் சிரமப்பட்டு வந்தார்.

எலிசபெத் ராணி
இந்தச் சூழலில் தான் நேற்றைய தினம் இவரது உடல்நிலை மோசமடைந்ததாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்தது. இதையடுத்து அவரது நெருங்கிய உறவினர்கள் அனைவரும் எலிசபெத் ராணியை நேரில் பார்க்க ஸ்காட்லாந்து விரைந்தனர். இந்தச் சூழலில் தான் இந்திய நேரப்படி நேற்று இரவு எலிசபெத் ராணி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அடுத்த அரசர்
ராணி எலிசபெத்தின் உடல்நிலை காரணமாக அவரது மகன் இளவரசர் சார்லஸ் தான் கடந்த சில காலமாகவே மகாராணியின் வேலைகளில் பெரும்பாலானவற்றைக் கவனித்து வருகிறார். நேற்று ராணி எலிசபெத் உயிரிழந்த நிலையில், அவரது மூத்த மகன் சார்லஸ் உடனடியாக அரசராகப் பொறுப்பு ஏற்றார். ராணி எலிசபெத்தின் உடலுக்கு இறுதிச் சடங்கிறான வேலைகளும் மறுபுறம் நடந்து வருகிறது.

பொது நிகழ்ச்சி
கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை காரணமாக ராணி எலிசபெத் பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்தே வந்தார். கடந்த ஜூலை மாதம் ராணியாகப் பதவியேற்று 70 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் நிகழ்வு நடந்த நிலையில், அதில் கூட ராணி எலிசபெத் அதிகம் கலந்து கொள்ளவில்லை. இப்படி முழு ஓய்வில் இருந்த ராணி எலிசபெத் கடந்த செப்.6ஆம் தேதி தான் கடைசி பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்.

கடைசி நிகழ்ச்சி எது
ராணி எலிசபெத் உயிரிழந்த தகவல் பிரிட்டன் அரசு குடும்பத்தைத் தாண்டி முதலில் பிரிட்டன் பிரதமருக்குத் தான் தெரிவிக்கப்படும். இப்போது பிரிட்டன் பிரதமராக லிஸ் டிரஸ் உள்ளார். சமீபத்தில் தான் இவர் பிரிட்டன் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். லிஸ் டிரஸை பிரதமராக நியமிக்கும் நிகழ்வு தான் ராணி எலிசபெத் கடைசியாகக் கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி என்பது நகை முரண்.

பிரிட்டன் பிரதமர்
கடந்த 2019 முதல் பிரிட்டன் பிரதமராக இருந்து போரிஸ் ஜான்சன், கொரோனா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இதனால் சில மாதங்களுக்கு முன்பு இவர் ராஜினாமா செய்தார். அந்நாட்டின் சட்டப்படி ஆளும் கட்சியின் தலைவரே நாட்டின் பிரதமராக இருப்பார் என்பதால் ஆளும் கன்சர்வேடிவ் கட்சித் தலைவரைத் தேர்வு செய்யத் தேர்தல் நடந்தது. இதில் லிஸ் டிரஸ் கன்சர்வேடிவ் கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

நியமித்தார்
அதைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸை பிரிட்டன் ராணி எலிசபெத் அதிகாரப்பூர்வமாக நியமித்தார். ஸ்காட்லாந்தில் பிரிட்டன் ராணி எலிசபெத்தை சந்தித்து லிஸ் டிரஸ் வாழ்த்து பெற்றார். ராணி எலிசபெத் பிரிட்டன் பிரதமராக நியமிக்கும் 15ஆவது நபர் லிஸ் டிரஸ் ஆவர். இது தான் பிரிட்டன் ராணி எலிசபெத் கலந்து கொண்ட கடைசி பொது நிகழ்வாகும்.

ஸ்காட்லாந்து அரண்மனை
பொதுவாக இந்த நிகழ்வு லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் தான் நடைபெறும். இருப்பினும் ராணி எலிசபெத்தின் உடல்நிலை அப்போதே மோசமாக இருந்தது. இதனால் பயணிக்கக் கூடாது என மருத்துவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டனர். இதன் காரணமாக அந்த நிகழ்வே பக்கிங்காம் அரண்மனையில் நடைபெறாமல் ஸ்காட்லாந்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று ராணி எலிசபெத் காலமானதும் ஸ்காட்லாந்தில் உள்ள இதே அரண்மனை தான்.












Click it and Unblock the Notifications