VR உலகில் சிறுமி பலாத்காரம்.. உலக நாடுகளை அலறவிடும் மிகப் பெரிய ஆபத்து இது.. என்ன நடந்தது?
லண்டன்: பிரிட்டனில் விர்ச்சுவல் ரியாலிட்டி உலகில் நடந்த பலாத்கார சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் நமது உலகில் பெண்களும் சிறுமிகளும் பாதுகாப்பாக இருக்கும் இடம் என்று எதாவது இருக்கிறதா என்ற கேள்வியை நமக்கு எழுப்புகிறது.. ரியல் உலகில் நடந்த இந்த கொடூரம் இப்போது சைபர் உலகிலும் நடக்கத் தொடங்கியுள்ளது.

பிரிட்டன் நாட்டில் சமீபத்தில் மெட்டாவேர்ஸில் ஒரு சிறுமியைச் சிலர் கூட்டுப் பலாத்காரம் செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மெட்டாவேர்ஸில் நடந்துள்ள முதல் பாலியல் பலாத்கார சம்பவம் இதுவாகும்.
விர்ச்சுவல் ரியாலிட்டி உலகம்: மெட்டாவேர்ஸ் என்பது விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்களைப் பயன்படுத்தி விளையாடும் ஒரு கேமாகும். இதில் நீங்கள் உங்களுக்கு என தனியாக ஒரு ஆன்லைன் உருவத்தை உருவாக்கிக் கொள்ளலாம். அதன் மூலம் நீங்கள் இந்த கேமை விளையாடலாம். பிரபல ஹாலிவுட் திரைப்படமான ரெடி பிளேயர் ஒன் இதுபோன்ற கான்செப்டில் தான் இருக்கும்.
இந்த மெட்டாவேர்ஸ் தளத்தில் தான் பிரிட்டனைச் சேர்ந்த 16 வயதான சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். யாரென்ற தெரியாத சிலர் அந்த சிறுமியைப் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. அந்நாட்டு போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இந்தச் சம்பவம் உலகெங்கும் பேசுபொருள் ஆகியுள்ளது.
பலாத்காரம்: டிஜிட்டல் பலாத்காரம் அல்லது விர்ச்சுவல் பலாத்காரம் என்பது இணையத்தில் நடக்கும் பாலியல் அத்துமீறல் நிகழ்வுகளாகும். இதுபோன்ற நிகழ்வுகள் கடந்த காலங்களிலும் நடந்துள்ளது. இருப்பினும், இதைச் சீரியாக எடுத்துக் கொண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவது இதுவே முதல்முறையாகும். இந்த டிஜிட்டல் பலாத்காரத்தில் உடல்ரீதியான தாக்குதல் எதுவும் இல்லை என்றாலும், அது உளவியல் அதிர்ச்சியை ஏற்படுத்துவதோடு பாதிக்கப்பட்டவர்களின் மன ஆரோக்கியத்தையும் பாதிப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது குறித்து உளவியல் வல்லுநர்கள் கூறுகையில், "இதனால் அந்த சிறுமி மன ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளார். விஆர் என்பது உண்மையாக நடப்பது போல இருக்க வேண்டும் என்பதால் அப்படியே தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த சிறுமிக்கு நிஜ உலகில் பலாத்காரம் செய்யப்பட்ட ஒருவரைப் போன்ற உளவியல் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
மன ரீதியான பாதிப்புகள்: பலாத்கார சம்பவங்களில் உடல் காயங்களை விட மன ரீதியான பாதிப்புகள் தான் அதிகமாக இருக்கும். அதேபோலத் தான் இந்த சிறுமிக்கும் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் தற்போது வரை நமது நாட்டில் (பிரிட்டன்) டிஜிட்டல் பலாத்காரத்திற்குச் சட்டங்கள் இல்லை. எனவே, இதை போலீசார் எப்படிக் கையாளப் போகிறார்கள் என்பதை நாம் பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்" என்றார்.
பிரிட்டன் மட்டுமின்றி உலகின் எந்தவொரு நாட்டிலும் இதுபோல விர்ச்சுவல் ரியாலிட்டி உலகில் நடக்கும் பலாத்கார சம்பவங்களைத் தண்டிக்கச் சட்டம் இல்லை. இதனால் வரும் காலத்தில் எங்கே இதுபோன்ற விஆர் உலகம் பாலியல் குற்றவாளிகளின் புகலிடமாக மாறுமோ என்று வல்லுநர்கள் அஞ்சுகின்றனர். இதன் காரணமாகப் பலாத்கார சட்டங்களில் தேவையான மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்றும் டிஜிட்டல் பலாத்கார குற்றவாளிகளைத் தண்டிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
விளக்கமும் எதிர்ப்பும்: இந்தச் சம்பவம் குறித்து மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "இதுபோன்ற சம்பவங்களை ஒருபோதும் ஏற்கனவே முடியாது. இதன் காரணமாகவே அனைத்து யூசர்களுக்கும் பெர்சனல் பவுண்டரி என்ற அம்சத்தை வழங்கியுள்ளோம். இதன் மூலம் அடையாளம் தெரியாத நபர்கள் உங்கள் அருகே வருவது தடுக்கப்படும்" என்றார். இருப்பினும், வெறுமன ஒரு பாதுகாப்பு அம்சத்தைத் தாண்டி பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யப் பல நடவடிக்கைகளை மெட்டா எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications