"அடுத்த சர்ச்சை.." மனைவி அக்ஷதாவால் வம்பில் மாட்டி ரிஷி சுனக்.. விசாரணையை தொடங்கிய நாடாளுமன்ற குழு
லண்டன்: பிரிட்டன் பிரதமராக இப்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இருக்கும் நிலையில், அவர் தொடர்ச்சியாகச் சர்ச்சையில் சிக்கி வருகிறார். இப்போது தனது மனைவியின் பங்குகளால் மற்றொரு சர்ச்சையில் அவர் சிக்கியுள்ளார்.
பிரிட்டன் பிரதமராக இப்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இருக்கிறார். கடந்தாண்டு பிரிட்டனில் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது சில மாத இடைவெளியில் இரு பிரதமர்கள் பதவி விலகினர்.

இதனால் பிரிட்டனில் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டது. சரியாக அப்போது பிரிட்டன் பிரதமராக வந்தவர் தான் ரிஷி சுனக். பிரிட்டனில் பிரதமர் பதவிக்கு வரும் முதல் இந்து, இளம் வயது பிரதமர் என்று பல சிறப்புகளை அவர் கொண்டிருக்கிறார்.
ரிஷி சுனக்: இக்கட்டான சூழலில் பிரிட்டன் பிரதமர் பதவிக்கு வந்த அவர், பிரிட்டன் பொருளாதாரத்தை மீட்க அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ரிஷி சுனக்கின் மனைவி தான் அக்ஷதா மூர்த்தி. இவர் இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தியின் மகள் ஆவர். அக்ஷதா மூர்த்திக்கும் இன்போசிஸில் குறிப்பிட்ட அளவுக்குப் பங்குகள் இருக்கிறது.
அந்நாட்டு சட்டப்படி வெளிநாட்டில் இருந்து ஈட்டும் வருவாய்க்குப் பிரிட்டனில் வருமான வரி செலுத்தத் தேவையில்லை. இதுவே சில மாதங்களுக்கு முன்பு பெரிய சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. பல ஆயிரம் வருமானத்திற்கு வரியைக் கட்டாமல் இருப்பது எப்படி நியாயம் எனப் பலரும் கேள்வி எழுப்பினர். இதையடுத்து சுனக் பிரதமரான பிறகு சர்ச்சையைத் தவிர்க்க வரி செலுத்த ஒப்புக் கொண்டார்.
சர்ச்சை: இதனிடையே அக்ஷதா மூர்த்தியால் மீண்டும் இப்போது ரிஷி சுனக் சர்ச்சையில் சிக்கியுள்ளார். தனது மனைவி வைத்திருக்கும் பங்குகள் குறித்து முறையாகக் கணக்கை சமர்ப்பிக்காத விவகாரத்தில் அந்நாட்டின் நாடாளுமன்றக் கண்காணிப்புக் குழு விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
குழந்தை பராமரிப்பு நிறுவனமான "கோரு கிட்ஸ்" நிறுவனத்தில் அக்ஷதா மூர்த்தி வைத்திருக்கும் பங்குகள் குறித்தே இப்போது நாடாளுமன்ற தர நிர்ணய ஆணையர் டேனியல் கிரீன்பெர்க் தலைமையிலான குழு விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முதலீடுகள் குறித்த தகவல்களை வெளிப்படையாகப் பகிர வேண்டும் என்ற நிலையில், அப்படிச் செய்யத் தவறியுள்ளதாகவும் இதன் காரணமாகவே விசாரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளக்கம்: அதேநேரம் விதிகள் அனைத்தும் முறையாகவே கடைப்பிடிக்கப்பட்டதாகவும் ஆய்வுக்கு நிச்சயம் உதவுவோம் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் நடந்த கூட்டத்தில் அக்ஷதாவின் பங்குகள் குறித்து சுனக் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை என்பதே புகாராகும்.\
ஏனென்றால் கடந்த மார்ச் மாதம் நிதியமைச்சர் ஜெர்மி ஹன்ட் தாக்கல் செய்த பட்ஜெட்டில் குழந்தை வளர்ப்போருக்கு ஊக்கத் தொகையை அறிவித்தார். இதன் மூலம் அக்ஷதா பங்கு வைத்திருக்கும் க்ரோ கிட்ஸ் உட்பட ஆறு நிறுவனங்களில் பெற்றோர் பதிவு செய்தால் அவர்களுக்குப் பலன்கள் இரட்டிப்பாகக் கிடைக்கும். இதன் காரணமாகவே இது இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.
கடந்தாண்டு பிரதமர் பதவிக்கு வந்த ரிஷி சுனக் அதன் பின் தொடர்ச்சியாகச் சர்ச்சையில் சிக்கி வருகிறார். முதலில் ஜான்சனின் அரசில் நிதியமைச்சராக இருந்தபோது லாக்டவுன் விதிகளை மீறிய புகாரில் சிக்கினார். அடுத்து சீட் பெல்ட் அணியாமல் இருந்தது, வளர்ப்பு நாயைப் பார்த்துக் கொள்ளாமல் பூங்காவில் உலா விட்டது என்று வரிசையாகச் சர்ச்சையில் சிக்கியிருந்தார்.












Click it and Unblock the Notifications