நள்ளிரவில் மருத்துவமனையில் திடீரென பற்றிய தீ! 10 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி பலி.. உ.பியில் சோகம்
லக்னோ: உத்தரப் பிரதேசம் ஜான்சி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்துள்ளன. 16 குழந்தைகள் காயங்களுடன் மீட்கப்பட்டிருக்கின்றன. தீ விபத்தில் குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் உ.பியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராணி லக்ஷ்மி பாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு திடீரென இந்த மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் வார்ட்டில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. விபத்திலிருந்து தப்பிக்க குழந்தைகளை துக்கிக்கொண்டு பெற்றோர் வேகவேகமாக வெளியேறியுள்ளனர். ஆனால், புகை மூட்டமும், தீயின் வெப்பமும் தாங்க முடியாமல் சிலரால் வெளியேற முடியவில்லை. குழந்தைகளையும் காப்பாற்ற முடியவில்லை.

தீ விபத்து குறித்து அறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக மீட்பு பணியில் இறங்கினர். வார்ட்டில் மொத்தம் 54 குழந்தைகள் இருந்திருக்கின்றன. இதில் 37 குழந்தைகளை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டிருக்கின்றனர். 10 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளன. தவிர 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். தீ விபத்தில் 10 குழந்தைகள் பலியாகியுள்ள சம்பவம் உத்தரப் பிரதேசம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்து இதயத்தை நொறுக்கிவிட்டதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
தனது x பக்கத்தில், "ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லக்ஷ்மி பாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்துள்ளது மிகவும் வருத்தமும், மனவேதனையும் அளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அளிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். அவர்கள் விரைவில் குணமடைய ஸ்ரீராமரை பிரார்த்திக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
இந்த விபத்து குறித்து அறிக்கையை 12 மணி நேரத்திற்குள் சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. உத்தரவையடுத்து துணை முதல்வர் பிரிஜேஷ் பதக் மற்றும் சுகாதாரத் துறை செயலர் பார்த்தசாரத்தி சென் சர்மா ஆகியோர் ஜான்சி மருத்துவமனையில் ஆய்வை மேற்கொண்டிருக்கின்றனர். இந்த விபத்திற்கு முக்கிய காரணமாக ஷாட் சர்க்கியூட்தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் விசாரணையின் முடிவில்தான் முழு காரணம் தெரியவரும்.
சம்பவம் குறித்து எஸ்எஸ்பி சுதா சிங் கூறுகையில், "மீட்கப்பட்ட 16 குழந்தைகளின் உயரை காப்பாற்ற தீவிர மருத்துவ போராட்டம் நடைபெற்று வருகிறது. ஷாட் சர்க்கியூட்தான் விபத்திற்கான முதன்மை காரணமாக கண்டறியப்பட்டிருக்கிறது. இருப்பினும் யாருடைய அலட்சியத்தால் இது ஏற்பட்டிருக்கிறது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த மருத்துவமனை 1968லிருந்து இயங்கி வருகிறது. கோடிக்கணக்கான பிரசவங்கள் இங்கு நடந்திருக்கின்றன. ஆயினும் இது போன்ற ஒரு சோமான சம்பவம் நடப்பது இதுவே முதல்முறை" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications