உபியில் 6 ஆண்டுகளில் 178 ரவுடிகள் சுட்டுக்கொலை.. தவறு செய்தால் தண்டனை உறுதி.. முதல்வர் யோகி எச்சரிக்கை
கடந்த 6 ஆண்டுகளில் ரவுடிகளுடன் நடந்த சண்டையில் 9 போலீஸார் இறந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்திருக்கின்றனர்.
லக்னோ: உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சியில் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 178 ரவுடிகளும், கொடூர குற்றங்களில் ஈடுபட்டவர்களும் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
உபி அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் மாநிலத்தில் குற்றங்கள் கணிசமாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், தவறு செய்ய நினைப்பவர்கள் கூட போலீஸாரின் நடவடிக்கைக்கு பயந்து அமைதியாக இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதனிடையே, இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், தவறு செய்தால் எவராக இருந்தாலும் நிச்சயம் தண்டனை உறுதி என எச்சரித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் முதல்வராக பதவியேற்றதுமே, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டார் யோகி ஆதித்யநாத். உபியில் எந்தக் குற்றச்செயல்களும் நடக்கக்கூடாது என்பதே காவல்துறையினருக்கு அவர் போட்ட முதல் உத்தரவாக இருந்தது. எனினும், உ.பி. மிகப்பெரிய மாநிலம் என்பதால் உடனடியாக குற்றச்செயல்களை குறைப்பது முடியாத காரியமாக இருந்தது. இதையடுத்து, ஒவ்வொரு குற்றச்செயல்களுக்கும் தனித்தனி போலீஸ் படையை அமைப்பது என்ற திட்டத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் செயல்படுத்தினார்.
அதன்படி, பெண்களை கேலி செய்பவர்களையும், பாலியல் தொல்லை அளிப்பவர்களையும் களையெடுப்பதற்காக தனிப் போலீஸ் பிரிவே உத்தரபிரதேசத்தில் உருவாக்கப்பட்டது. அதேபோல, ரவுடிகளை கட்டுப்படுத்தவதற்காக போலீஸில் ஒரு பிரிவினர் பணியமர்த்தப்பட்டனர். இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளால் உத்தரபிரதேசத்தில் குற்றச்சம்பவங்கள் கணிசமாக குறைந்து வருகின்றன.
மேலும், தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், 10-க்கும் மேற்பட்ட கொலை, ஆள்கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள், குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்வோர் உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான கட்டிடங்களை புல்டோசர் மூலம் இடித்து தள்ளும் நடைமுறையையும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிமுகப்படுத்தினார். இதனால் வீடுகள் இடிக்கப்பட்டு விடுமே என்ற பயத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட ரவுடிகளும், சமூக விரோதிகளும் தயங்கி வருகின்றனர்.
இந்த சூழலில், யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்ற கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 178 குற்றவாளிகள் போலீஸாருடன் நடந்த என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக உபி அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த 178 குற்றவாளிகளில் பயங்கர ரவுடிகளும், கொடூரமான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களும் அடங்குவர். இதனிடையே, இந்த விவகாரத்தை முன்வைத்து சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசின் மீது குற்றம்சாட்டி வருகின்றன. குற்றங்களை குறைப்பதுதான் அரசின் வேலையே தவிர, குற்றவாளிகளை சுட்டுக்கொல்வது மனிதநேயமற்ற நடவடிக்கை என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் அண்மையில் தெரிவித்தார்.
இதுகுறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்த யோகி ஆதித்யநாத் "உபியில் எந்த குற்றவாளிகளும் வேண்டுமென்றே கொல்லப்படவில்லை. போலீஸாரை அவர்கள் தாக்கியதால் தற்காப்பு நடவடிக்கையாகவே இந்த சம்பவங்கள் நடக்கின்றன. கடந்த 6 ஆண்டுகளில் ரவுடிகளுடன் நடந்த சண்டையில் 9 போலீஸார் இறந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்திருக்கின்றனர். தவறு செய்தால் தண்டனை உண்டு என்கிற பயம் அனைத்து குற்றவாளிகளுக்கும் வர வேண்டும்" என்றார் அவர்.












Click it and Unblock the Notifications