உத்தர பிரதேசத்தில் சிறைக்கைதிகள் 26 பேருக்கு எச்.ஐ.வி.. மருத்துவ பரிசோதனையில் அதிர்ச்சி!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் உள்ள சிறைச்சாலைகளில் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது சிறைக்கைதிகள் 26 பேருக்கு எச்.ஐ.வி நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்று உத்தர பிரதேசம். இங்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
முதல்வர் யோகி ஆதித்ய நாத் உத்தரபிரதேசத்தில் உள்ள சிறைச்சாலைகளை நவீனப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாக அறிவித்திருந்தார்.
எய்ட்ஸ் நோயாளியிடமிருந்து பரவியதா
26 பேருக்கு எச்.ஐ.வி
இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் உள்ள சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவு அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்தது. பரிசோதனை முடிவில் மொத்தம் 26 சிறைக்கைதிகளுக்கு எச்.ஐ.வி பாசிட்டிவ் இருப்பது தெரியவந்துள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட இந்த ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது.
மூன்று கட்டங்களாக முகாம்
உத்தர பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்ட சிறையில் இருக்கும் கைதிகளில் 26 பேருக்கு எச்.ஐ.வி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பாரபங்கி மாவட்ட சிறையில் கடந்த மாதம் 10-ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 1-ஆம் தேதி வரை மூன்று கட்டங்களாக இந்த சிறையில் உள்ள கைதிகளுக்கு எச் ஐ வி முகாம் நடத்தப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் தான் 26 சிறைக்கைதிகளுக்கு எச் ஐ வி பாசிட்டிவ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் எச்.ஐ.வி பரிசோதனை
மாநிலத்தின் ஒரு மாவட்ட சிறையில் மட்டும் 26 பேருக்கு எச்.ஐ.வி நோய் பாதிப்பு இருப்பது தொடர்பாக அந்த மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அவதேஷ் யாதவ் கூறுகையில், ''இந்த சிறையில் மொத்தம் 3,300 கைதிகள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எச் ஐ வி பரிசோதனை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றார். 26 சிறைக்கைதிகளுக்கு எச் ஐ வி நோய் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
5 ஸ்டார் அந்தஸ்து
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் உத்தர பிரதேச மாநிலத்தின் பதேகர் மாவட்டத்தில் உள்ள பருக்காபாத் சிறைச்சாலைக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் 5 ஸ்டார் அந்தஸ்து வழங்கியது குறிப்பிடத்தக்கது. சுமார் 1,144 கைதிகள் உள்ள இந்த சிறைச்சாலையில் பிரபல ஓட்டல்களுக்கு இணையாக உயர்தர அளவில் அங்கு உணவு சமைத்து சுகாதார முறையில் வழங்கப்படுவதால் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஆய்வு நடத்தி இந்த சான்றிதழை வழங்கியது.