உத்தரப்பிரதேசத்தில் பட்டியலின சிறுவனுக்கு அக்கிரமம்.. அரசுப் பள்ளியில் சாதிய வெறுப்புணர்வு
லக்னோ: ஜாதி, மதம் நம் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் ஆழமாகவே வேரூன்றியுள்ளது. அதற்கு மற்றுமொரு உதாரணம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது. 6 வயதேயான பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனுக்கு அவன் படிக்கும் அரசுப் பள்ளியில் உள்ள ஆசிரியர்களின் சாதிய வெறுப்புணர்வால் நடந்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், முஷாஃபர்நகர் அருகே ஜன்ஷத் பகுதியில் அரசுத் தொடக்கப் பள்ளி உள்ளது. அங்கு பட்டியலினத்தைச் சேர்ந்த 6 வயதே ஆன சிறுவன், ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான். செவ்வாய்க்கிழமை பள்ளி முடிந்ததும், மற்ற மாணவர்கள் எல்லாம் வழக்கம் போல வீடு திரும்பியுள்ளனர். ஆனால், அந்த சிறுவன் வீடு திரும்பவில்லை. நேரம் ஆக.. ஆக சிறுவனின் அம்மாவுக்கு பயமும், பதற்றமும் தொற்றியுள்ளது. தன் மகனின் நிலை குறித்து சக மாணவர்களிடம் கேட்டுள்ளார். அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. உடனடியாக சிறுவனின் அம்மா பள்ளிக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது பள்ளி பூட்டப்படிருந்தது.

இருப்பினும் பள்ளிக்குள் இருந்து சிறுவனின் அழுகுரல் வெளியில் கேட்டுள்ளது. உறவினர்கள் மற்றும் ஊர்க்காரர்கள் இணைந்து தலைமை ஆசிரியருக்கு தொடர்பு கொண்டுள்ளனர். சிறிது நேரத்தில் ரவிதா ராணி என்கிற ஆசிரியரின் கணவர் பள்ளிக்கு சாவியுடன் வந்து கதவை திறந்துள்ளார். மேலும், “குழந்தை வகுப்பறையில் தூங்கி விழுந்திருப்பான்.” என்று அலட்சியமான பதிலையும் ரவிதாவின் கணவர் கூறியிருக்கிறார். சந்தேகமடைந்த சிறுவனின் அம்மா, இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன்பிறகுதான் சிறுவனுக்கு சாதிய வெறுப்புணர்வால் நடந்த அக்கிரமங்கள் வெளியில் வந்தன. சிறுவன் பட்டியலினத்தைச் சேர்ந்தவன் என்பதால், அந்தப் பள்ளியில் உள்ள ஆதிக்க சாதியைச் சேர்ந்த சில ஆசிரியர்கள் தொடர்ந்து அவனுக்கு பல்வேறு இன்னல்களை கொடுத்துள்ளனர். சாதிய வெறுப்புணர்வால் பள்ளி ஆசிரியர்கள் சிறுவனை வலுக்கட்டாயமாக கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்துள்ளனர். அதைத் தொடர்ந்து சிறுவனை வேண்டுமென்றே வகுப்பறைக்குள் வைத்து பூட்டி சென்றதும் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் பள்ளிக் கல்வித் துறை வரை சென்று பூதாகரமாகியுள்ளது. முதல்கட்டமாக பள்ளியின் தலைமை ஆசிரியர் சந்தியா ஜெயின் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் ரவிதா ராணி மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து 2 அதிகாரிகள் அடங்கிய குழு விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், “வகுப்பறையை பூட்டும்போது, நன்கு சரிபார்த்துவிட்டு பூட்ட வேண்டும்.” என்றும் உத்தரவிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications