அதிர்ச்சி.. கார்ட்டூன் பார்த்து கொண்டிருந்த 5 வயது சிறுமிக்கு திடீரென மாரடைப்பு.. துடிதுடித்து பலி!
லக்னோ: உபி மாநிலத்தில் ஐந்து வயது சிறுமி கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பகீர் கிளப்புவதாக இருக்கிறது.
முன்பெல்லாம் மாரடைப்பு என்பது பொதுவாக வயதானவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் இடையே தான் ஏற்படும். ஆனால், இப்போது அனைவரும் ஏற்படத் தொடங்கியுள்ளது. அதிலும் கொரோனாவுக்கு பிறகு இது ரொம்பவே மோசமாகிவிட்டது.

நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் இளைஞர்கள், அவ்வளவு ஏன் குழந்தைகளுக்குக் கூட சமீப காலங்களாக மாரடைப்பு ஏற்படுகிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.
மாரடைப்பு: உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ஹதைகேடா என்ற இடத்தில், ஐந்து வயது சிறுமி தனது மொபைல் போனில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்படவே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த அந்த அந்த சிறுமி ஐந்து வயதான காமினி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
காமினி தனது தாயின் அருகே படுத்துக் கொண்டு கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது கைகளில் இருந்த மொபைல் திடீரென கீழே விழுந்துள்ளது. அந்த சிறுமியும் மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து அவள் உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சிறுமி உயிரிழப்பு: இருப்பினும், அங்கே அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். சிறுமி மாரடைப்பால் உயிரிழந்து இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக ஒப்படைக்குமாறு குடும்பத்தினரிடம் கேட்டதாகவும் இருப்பினும் அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றும் மருத்துவர்கள் கூறினர்.
அவர் மாரடைப்பால் இறந்தாரா அல்லது வேறு எதாவது நோயால் இறந்தாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. சமீப காலங்களில் குழந்தைகள் மத்தியில் இதுபோன்ற மாரடைப்பு ஏற்படுவது இது முதல் முதல்முறை இல்லை. கடந்த சில வாரங்களில் 10க்கும் மேற்பட்ட நபர்கள் மாரடைப்பால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல்முறை இல்லை: கடந்த டிசம்பர் மாதம் 16 வயதான பிரின்ஸ் குமார் என்பவர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மயக்கமடைந்தார். அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால், அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதேபோல பிஜ்னோரைச் சேர்ந்த 12 வயதான ஷிப்ரா என்ற மற்றொரு நபர் வகுப்பறையில் திடீரென வகுப்பறைக்குள் விழுந்து இறந்தார்.
இதுபோன்ற மாரடைப்பு ஏற்படுவது பொதுவாகக் குளிர் காலத்தில் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். குளிர் காலத்தில் பொதுவாக ஆக்சிஜன் அளவு குறைகிறது. ரத்த அழுத்தமும் குறைகிறது என்பதால் இது ரத்த உறைவு அபாயத்தை அதிகரிக்கிறது.. இதனால் குளிர் காலத்தில் பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்திய மருத்துவ கவுன்சில்: கொரோனாவுக்கு பிறகு இளைஞர்களுக்கு ஏற்படும் மாரடைப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. இது குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் நடத்திய ஆய்வில் கொரோனா கடுமையாகப் பாதிக்கப்பட்டோருக்கு மாரடைப்பு மற்றும் இதய பாதிப்பை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட அடுத்த ஓரிரு ஆண்டுகள் கடுமையாக உழைக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டு இருந்தது.












Click it and Unblock the Notifications