கங்கை நதியில் 'சிக்கன் கபாப்'.. ஹூக்கா புகைத்த 8 இளைஞர்கள் மீது வழக்கு.. உபி போலீஸ் நடவடிக்கை
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் பிரக்யராஜ் பகுதியில் கங்கை நதியில் படகு சவாரி செய்த போது சிக்கன் கபாப் சமைத்து சாப்பிட்டுக்கொண்டும், ஹூக்கா புகைத்தபடி சென்ற 8 இளைஞர்கள் மீது மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் செயல்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் தேசிய நதி கங்கை. இதுமட்டுமின்றி இந்துக்களின் புனித நதியாகவும் இது கருதப்படுகிறது.
உத்திரகாண்ட் மாநிலம் கங்கோத்ரி மலைப்பகுதியில் இருந்து உருவாகும் இந்த நதியானது உத்தரபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் வழியாக சென்று இறுதியாக மேற்கு வங்காளம் மற்றும் வங்க தேசம் வழியாக வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.

படகில் சிக்கன் கெபாப்
இந்த நதியில் புனித நீராடினால் நாம் செய்த பாவங்கள் மட்டுமின்றி 7 தலைமுறையினரின் பாவங்கள் கழிந்துபோகும் என்று கூறப்படுவதால் பலர் இந்த நதிக்கு வந்து புனித நீராடி செல்வர். இதனால் தினமும் இந்த நதிக்கு ஆயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர். இவ்வாறு இந்துக்களால் மிகவும் புனித நதியாக நம்பப்படும் இந்த கங்கை நதியில், இளைஞர்கள் சிலர் படகு சவாரி மேற்கொண்டு அதில் சிக்கன் கபாப் மற்றும் குட்கா புகைத்தப்படி செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

30 வினாடிகள் ஓடும் வீடியோ
இந்துக்களின் புனித நதியாக கருதப்படும் கங்கை நதியில் படகுகளில் சென்றபடி ஹூக்கா புகைப்பது மற்றும் அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடுவது போன்ற காட்சிகள் சர்ச்சையை கிளப்பியது. கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றதாக கருதப்படும் இந்த சம்பவத்தின் 30 வினாடிகள் ஓடக்கூடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகின்றன. இந்த வீடியோவில், வெள்ளை நிற சட்டை அணிந்து இருக்கும் நபர் ஹூக்காவை புகைத்து கொண்டிருக்கிறார். மறுபக்கம் படகில் சிக்கன் கெபாப் சமைக்கப்படுகிறது. அதை சுற்றி சிலர் அமர்ந்து இருக்கின்றனர். அருகில் பிற படகுகளும் தென்படுகின்றன.

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில்
கங்கை நதியும் யமுனை நதியும் சங்கமிக்கும் இடத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாக பல தரப்பிலும் கண்டனக்குரல்கள் எழுந்த நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று பிரக்யாராஜ் போலீசார் உறுதி அளித்துள்ளனர். இது குறித்து பிரக்யாராஜ் போலீஸ் உயர் அதிகாரி ஷைலேஷ் பாண்டே கூறுகையில், ''ஹூக்கா மற்றும் அசைவ உணவுகள் இரண்டுமே பயன்படுத்தப்படுவது வீடியோவில் தெரிகிறது.

வழிபாட்டுத் தலத்தை அசுத்தப்படுத்தினர்
இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏனைய நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார். குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும், வழிபாட்டுத் தலத்தை அசுத்தப்படுத்தியதாகவும் சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications