யோகி ஆதித்யநாத் அரசில், பசு பாதுகாப்பு தூதரான ஹேமமாலினி
லக்னோ: உத்தரபிரதேச அரசின் பசு பாதுகாப்பு பிரசார தூதராக நடிகையும், மதுரா தொகுதி எம்.பி.யுமான ஹேமமாலினி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பசு வதை செய்யப்படுவதை தடுக்க உததரபிரதேச அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வப்போது, மாட்டிறைச்சி வைத்திருப்பவர்கள் மீது தாக்குதல் நடக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
இந்தநிலையில் பசுக்களின் விற்பனையை அதிகரிப்பதற்கும், பசுக்களை பாதுகாப்பதற்காகவும் பிரபல நடிகையான ஹேமமாலினி தூதராக அம்மாநில அரசு நியமித்துள்ளது.

கவ் சேவா ஆயோக்
இதற்கிடையே, உத்தரபிரதேச மாநில அரசு பசுக்களை பாதுகாப்பதற்காக ‘கவ் சேவா ஆயோக்' என்ற பசு பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தனி அதிகாரம் கொண்ட அமைப்பாகும். பசுக்களை பாதுகாப்பது தொடர்பான ஆலோசனைகளை அரசுக்கு வழங்கும்.

ஹேமமாலினி நியமனம்
இந்த அமைப்பு செயல்பட ரூ.647 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், பசுவை பாதுகாப்பது தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரத்தில் ஹேமமாலினி ஈடுபட உள்ளார். இந்த நியமனத்தை ஏற்றுக்கொண்ட ஹேமமாலினி பசு பாதுகாப்பு தொடர்பாகவும், விழிப்புணர்வு தொடர்பாகவும் தனது திட்டங்களை பசு பாதுகாப்பு அமைப்பின் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விளம்பரம்
டிவி, ரேடியோ, செய்தித்தாள், சமூக வலைதளங்களில் விளம்பரம் தரப்பட உள்ளது என்றும், பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள ஹேமமாலினியை நியமனம் செய்தால், விரைவில் மக்களிடம் சென்றடையும் என்பதால் அவரை நியமனம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது என்று கவ் சேவா ஆயோக் அமைப்பின் முன்னாள் தலைவர் ராஜீவ் குப்தா தெரிவித்துள்ளார்.

புகைப்படங்கள் தயாரிப்பு
பாலிவுட்டில் கனவு நாயகியாக வலம் வந்த நடிகை ஹேமமாலினி, தீவிர அரசியலில் இறங்கி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது, பசு பாதுகாப்பு அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரால் பசுக்களின் விற்பனையும், மாடுகளுக்கு தேவையான உணவுப் பொருட்களின் விற்பனையும் அதிகரிக்கும். எனவே, அதற்கான புகைப்படங்கள் எடுக்கும் பணி தொடங்கி உள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications