"கிளப்ஃபுட்" பாதித்த 10,000 குழந்தைகளுக்கு சிகிச்சை.. அதானி + அனுஷ்கா அறகட்டளைகள் அறிவிப்பு
மும்பை: அதானி அறக்கட்டளை மற்றும் அனுஷ்கா அறக்கட்டளை ஆகியவை தேசிய சுகாதார இயக்கத்துடன் இணைந்து அடுத்த மூன்று ஆண்டுகளில் 10,000க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கிளப்ஃபுட் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை மற்றும் பராமரிப்பு வழங்க திட்டமிட்டுள்ளது.

நம் நாட்டின் முன்னணி தொழிலதிபரான கவுதம் அதானி, அதானி அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளை பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் அதானி அறக்கட்டளை மற்றும் அனுஷ்கா அறக்கட்டளை ஆகியவை தேசிய சுகாதார இயக்கத்துடன் இணைந்து அடுத்த மூன்று ஆண்டுகளில் முக்கிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
அதன்படி மத்தியப் பிரதேசம், ஹரியானா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் கிளப்ஃபுட் (Clubfoot) குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 10,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை மற்றும் சிகிச்சைக்கு பிந்தைய பராமரிப்பு வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு உலக கிளப்ஃபுட் தினத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டு முயற்சியின்படி பொது சுகாதார அமைப்புகளின் கீழ் 67 கிளினிக்குகள் உருவாக்கப்பட உள்ளது. இதன்மூலமாக சுகாதாரப் பணியாளர்களுக்கான திறன் மேம்பாடு, நோயின் தொடக்கத்தை கண்டறிந்து சரியான பரிந்துரைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதற்கான திட்டம் உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் அமைந்துள்ள மன்யாவர் காசிராம் சம்யுக்த் சிகித்சாலய் மற்றும் ட்ராமா சென்டரில் தொடங்கப்பட்டுள்ளது.
கிளப்ஃபுட் என்பது பிறக்கும் போதே ஒன்று அல்லது இரண்டு பாதங்களும் உட்புறமாக வளைந்திருக்கும். இது ஒரு பிறவுக்குறைபாடு பாதிப்பாகும். உலகில் ஒவ்வொரு 800 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இந்த பாதிப்பு உள்ளது. இந்தக் குறைபாட்டை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட 'பொன்செட்டி' முறை மூலம் திறம்பட சிகிச்சை அளிக்க முடியும். ஆனாலும் ஏழை மக்களுக்கு முறையாக சிகிச்சைகள் கிடைப்பதில் தாமதம் உள்ளது. இதனால் அவர்களின் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 33,000 கிளப்ஃபுட் பிறப்புகள் பதிவாகின்றன. இத்திட்டத்தின் கீழ் வரும் ஐந்து மாநிலங்களில் ஏறக்குறைய 12,000 வழக்குகள் ஏற்படுகின்றன. குறிப்பாக உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தான் அதிக கிளப்ஃபுட் பாதிப்பு குழந்தைகள் உள்ளனர். இங்கு ஆண்டுதோறும் சுமார் 6,000 குழந்தைகள் இக்குறைபாட்டுடன் பிறக்கின்றன. இந்தத் திட்டத்தின்கீழ் உத்தர பிரதேசத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 61 மாவட்டங்களில் உள்ள 67 கிளப்ஃபுட் கிளினிக்குகள் தொடங்கப்படும். சமூக ரீதியான அணுகல், மருத்துவப் பராமரிப்பு, திறன் மேம்பாடு மற்றும் குடும்ப ஆதரவு ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இந்த கிளினிக்குகள் செயல்படும்.
அதுமட்டுமின்றி இந்த திட்டத்தில் பணியாற்றப்போகும் 51 சுகாதார வல்லுநர்களின் திறன்களை மேம்படுத்தவும், 30,000-க்கும் மேற்பட்ட கள சுகாதாரப் பணியாளர்களுக்கு கிளப்ஃபுட் குழந்தைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சரியான நேரத்தில் சிகிச்சை பரிந்துரைகளை வழங்க விழிப்புணர்வு வழங்கப்பட இலக்கு நி்ர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி அதானி அறக்கட்டளையின் தலைவரான டாக்டர் ப்ரீத்தி அதானி கூறுகையில், "இந்த பாதிப்பை தொடக்கத்திலேயே கண்டறியந்து சிகிச்சை அளிக்க வேண்டும். இது கிளப்ஃபுட் குழந்தைகளை சுதந்திரமாக வாழவும், கல்வி மற்றும் சமூக நடவடிக்கைகளில் முழுமையாகப் பங்கேற்கவும் உதவும்," என்றார்.
அதேபோல் அனுஷ்கா அறக்கட்டளையின் நிறுவனர் தீபக் பிரேம்நாராயண், "இந்தக் கூட்டு முயற்சி ஐந்து மாநிலங்களிலும் தரமான சிகிச்சை வழங்கும் முயற்சியாகும்" என்று தெரிவித்தார். இதன் மூலம் 'கிளப்ஃபுட்' பாதிப்பை சரிசெய்வதற்கு தேவையான இந்திய உள்கட்டமைப்புகளை இந்த திட்டம் மேம்படுத்த உள்ளது.
இந்த திட்டத்தில் உள்ள அதானி அறக்கட்டளை 1996 இல் நிறுவப்பட்டது. சுகாதாரம், கல்வி, நிலையான வாழ்வாதாரங்கள், காலநிலை நடவடிக்கை மற்றும் சமூக மேம்பாடு போன்ற பல்வேறு துறைகளில் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மொத்தம் 22 மாநிலங்களில் செயல்படுவதோடு, ஆண்டுதோறும் 13.3 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறது.
அதேபோல் பொது சுகாதார துறையில் பார்ட்னராக இருந்து கிளப்ஃபுட் பாதிப்பை சரிசெய்வதில் அனுஷ்கா அறகட்டளை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.தற்போது 13 மாநிலங்களில் உள்ள 165 மாவட்டங்களில் சிகிச்சைத் திட்டங்களை ஆதரித்து வருகிறது. இதுவரை இந்த அறக்கட்டளை 26,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்கியுள்ளது. இந்தியாவில் கிளப்ஃபுட் பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகளில் ஆறில் ஒரு குழந்தை அனுஷ்கா ஆதரவு கிளினிக் மூலம் சிகிச்சை பெறுவது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications