26 ஆண்டுகளுக்கு முன்பு சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் அமைத்த கூட்டணி.. என்ன நடந்தது.. எப்படி உடைந்தது?
Recommended Video
லக்னோ: சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொள்வது புதிது கிடையாது. ஆனால் அதிசயமான நிகழ்வுகளில் ஒன்று.
26 வருடங்களுக்கு முன்பாக இவ்விரு கட்சிகளும் எதற்காக கூட்டணி அமைத்தனரோ, அதே தேவைக்காகத்தான் இப்போதும் இரு கட்சிகளும் கைகோர்த்துள்ளன.
1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், உத்திர பிரதேசத்தில் உள்ள பாபர் மசூதி, கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு மத மோதல்கள் நடைபெற்று வலதுசாரி இந்துக்கள் மத்தியில் பாஜகவுக்கு ஆதரவு அதிகரித்து.
எனவே மதரீதியாக பாஜக வலுப்பெறுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 1993ஆம் ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தலின்போது, பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்தன.
பெரிய தலைவர்கள்
அப்போது பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக கன்சிராம் இருந்தார். சமாஜ்வாதி கட்சி முலாயம்சிங் யாதவ் தலைமையில் இயங்கியது. இவ்விரு தலைவர்களும் பலமுறை டெல்லியில் ரகசிய சந்திப்புகளை நிகழ்த்தி இந்த கூட்டணியை உறுதி செய்ததாக தகவல்கள் உண்டு. அப்போது சமாஜ்வாதி கட்சி தொடங்கி ஒரு வருடம் ஆகி இருந்த கைக்குழந்தை.
கணிசமான வெற்றி
அந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 164 இடங்களில் போட்டியிட்டு, 67 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சமாஜ்வாதி கட்சி 256 தொகுதிகளில் போட்டியிட்டு, 109 தொகுதிகளை வென்றது. உத்தரப்பிரதேசத்தில் இப்போதைய உத்தரகாண்ட் பகுதியும் இணைந்து இருந்தது. எனவே சட்டசபை தொகுதிகள் எண்ணிக்கை 425 என்ற அளவில், மிகப்பெரிய மாநிலமாக உத்தரபிரதேசம் விளங்கிய காலகட்டம் அது.
|
தனிப்பெரும்பான்மை தவிர்ப்பு
தனித்து போட்டியிட்ட பாஜக 177 தொகுதிகளை வென்றது. எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதற்கு, தனிப்பெரும் கட்சியான பாஜகவிற்கு வாய்ப்பு தரப்பட்டது. ஆனால் பிற கட்சிகள் எதுவுமே பாஜகவுக்கு ஆதரவு தர மறுத்துவிட்டன. பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு நடந்த தேர்தல் என்பதால், பாஜகவுடன் சேருவதை தவிர்ப்பது நல்லது என்ற முடிவில் அனைத்து கட்சிகளும் இருந்தன. இதையடுத்து பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகள் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்தன.
|
கசப்பான முறிவு
ஆனால் 1995 ஆம் தேதி இந்தக் கூட்டணி ஒரு கசப்பான சம்பவத்திற்கு பிறகு முடிவுக்கு வந்தது. லக்னோ நகரில் உள்ள விருந்தினர் மாளிகையில் மாயாவதி ஆலோசனை கூட்டம் நடத்திய போது, சமாஜ்வாதி கட்சி தொண்டர்கள் உள்ளே அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர். ஜாதி ரீதியாக மாயாவதி, அவமானப்படுத்தப்பட்டதாக அப்போது வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அந்த கூட்டணி முடிவுக்கு வந்தது. இதன் பிறகு 26 வருடங்களுக்கு பிறகு சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சியுடன் கைகோர்த்துள்ளது. இப்போதும், பாஜகதான் இவ்விரு கட்சிகளின் முக்கிய எதிரி. 1993 ஆம் ஆண்டை போலவே!