லக்கிம்பூர் சம்பவம்.. "அரசின் மீது துளியும் நம்பிக்கை இல்லை.." உயிரிழந்தோரின் உறவினர்கள் விரக்தி
லக்னோ: லக்கிம்பூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் உறவினர்கள், அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது தொடர்பாக சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
கடந்த 2019 இறுதியில் தொடங்கி விவசாயிகள் போராட்டம் பல மாதங்களாகத் தொடர்ந்தது. இந்தச் சூழலில் கடந்த நவ. மாதம் விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே லக்கிம்பூர் பகுதியில் கடந்த அக். 3ஆம் தேதி விவசாயிகள் மத்திய அமைச்சருக்குச் சொந்தமான கார் மோதியதில் 4 விவசாயிகள் உட்பட பலர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
லக்கிம்பூர் சம்பவம்: மத்திய அமைச்சர் மகனுக்கு ஜாமீன்! நீதிபதி சொன்ன காரணம் என்ன தெரியுமா- பரபர தகவல்
ஜாமீன்
இந்த வழக்கில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் காரணமாக அஜய் மிஸ்ரா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர். இருப்பினும், அவர் அமைச்சரவையில் தொடர்ந்தார். இந்த வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இதில் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.
சாடல்
மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு இந்த வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது, விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அவர் மீதான வழக்கில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி அலகாபாத் உயர்நீதிமன்றம் இன்று அவருக்கு ஜாமீன் வழங்கியது. இருப்பினும், இந்த உத்தரவைக் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் கடுமையாகச் சாடியுள்ளது. இது தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
நம்பிக்கை இல்லை
லக்கிம்பூர் சம்பவத்தில் உயிரிழந்த 19 வயதான குர்விந்தர் சிங்கின் தந்தை சுக்விந்தர் சிங் இது தொடர்பாகக் கூறுகையில், "இவ்வளவு சீக்கிரம் அவருக்கு ஜாமீன் கிடைத்தது நல்ல அறிகுறி அல்ல. முன்பும் சரி, இப்போதும் சரி இந்த அரசு மீது எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. அஜய் மிஸ்ரா கூட இன்னும் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படவில்லை. மோடி தொடர்ச்சியாக ஜூம்லாகளை (அரசியல் வாக்குறுதி) கொடுக்கிறார். ஆனால் அவரால் தனது சொந்த அமைச்சரைக் கூட நீக்க முடியாது" என்றார்
பிரதமர் மோடி
முன்னதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்த விவகாரத்தில் முதல் முறையாக மவுனம் கலைத்தார். இது குறித்து பிரதமர் மோடி பேசுகையில், "இதில் உச்ச நீதிமன்றம் கண்காணிப்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. மாநில அரசு இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது" என்று அவர் கூறினார்.
தொடர்ந்து போராடுவோம்
இந்தச் சம்பவத்தில் நான்கு விவசாயிகளுடன் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ராமன் காஷ்யப்பின் சகோதரர் அமன் காஷ்யப் கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு ஜாமீன் என்பது விடுதலைக்குச் சமமானதல்ல. நாங்கள் தொடர்ந்து போராடுவோம். அவருக்கு ஜாமீன் கிடைத்ததால் வழக்கு முடிந்துவிட்டது என்று அர்த்தமல்ல. மத்தியிலும், மாநிலத்திலும் இவர்கள் தான் ஆட்சியில் இருக்கிறார்கள். இதனால்தான் இப்படி நேர்ந்தது. ஆனால் இதற்கு மக்கள் பதில் சொல்வார்கள். ஒருவேளை அரசு மாறினால், இவர்களால் இப்போது செய்வதைத் தொடர்ந்து செய்ய முடியாது" என்றார்.