யோகி ஆதித்யநாத்தை புகழ்ந்த பெண் எம்எல்ஏக்கு அகிலேஷ் யாதவ் கொடுத்த தண்டனை.. அதிரடி நீக்கம்! பின்னணி
லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சிறப்பான செயல்பாட்டால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது. என் கணவரை கொலை செய்தவர்களுக்கு தண்டனை பெற்று கொடுக்க யாரும் உதவவில்லை. ஆனால் யோகி ஆதித்யநாத்தால் தான் கொலையாளிகளுக்கு தண்டனை கிடைத்தது என்று சட்டசபையில் புகழ்ந்து பேசிய சமாஜ்வாதி எம்எல்ஏ பூஜா பால் என்பவரை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் செயல்பட்டு வருகிறார். அங்கு அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி எதிர்க்கட்சியாக உள்ளது. இந்நிலையில் தான் தற்போது அங்கு சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

சட்டசபையில் நடந்த விவாதத்தில் சமாஜ்வாதி கட்சியின் எம்எல்ஏ பூஜா பால் பேசினார். அப்போது அவர் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை புகழ்ந்து பேசினார்.
பூஜா பால் பேசும்போது, ‛‛நான் என் நிலைமையை உங்கள் முன் சொல்ல விரும்புகிறேன். நான் என் கணவரை இழந்துவிட்டேன். அவர் முன்னாள் எம்எல்ஏ. இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. என் கணவரை யார் கொன்றார்கள் என்பது சட்டசபையில் உள்ள அனைவருக்கும் தெரியும். என் கஷ்டத்தை பல ஆண்டுகளாக யாரும் கண்டுக்கொள்ளவில்லை. இதுபற்றி முதல்வரிடம் (யோகி ஆதித்யநாத்) கூறினேன். அவர் என் கஷ்டத்தை கேட்டார். நம்பிக்கை அளித்தார். என் கணவரின் கொலைக்கு நீதி பெற்று தருவதாக கூறினார்.
என்னை போல் பிரயாக்ராஜில் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல பெண்கள் தங்களின் அன்புக்குரிய கணவர் மற்றும் மகன்களை இழந்து தவிக்கின்றனர். தாதா ஆதிக் அகமது போன்றவர்களுக்கு எதிராக துணிச்சலாக எடுக்கும் நடவடிக்கைகளுக்காக முதல்வருக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். கிரிமினல்கள் மீது இரக்கல் காட்டாமல் முதல்வர் நடவடிக்கை எடுக்கிறார். அவரது செயல்பாட்டால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது. பிரயாக்ராஜ் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் வசிக்கும் மக்கள் யோகி ஆதித்யநாத் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்'' என்று கூறியிருந்தார். உத்தர பிரதேசத்தில் பாஜகவும், சமாஜ்வாதி கட்சியும் எதிரெதிர் துருவங்களாக உள்ளன.
இந்நிலையில் தான் சமாஜ்வாதி எம்எல்ஏ பூஜா பால், பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத்தை புகழ்ந்தது பெரும் பேசும் பொருளானது. இந்நிலையில் தான் யோகி ஆதித்யநாத்தை புகழ்ந்த பூஜா பால் எம்எல்ஏவை கட்சியில் இருந்து சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் அதிரடியாக நீக்கி உள்ளார். கட்சி வரம்புகளை மீறி செயல்பட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications