யோகி ஆட்சியில்.. 'சமாஜ்வாடி தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படுகின்றன'.. அகிலேஷ் யாதவ் சொல்கிறார்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. உ.பி தேர்தலில் மீண்டும் வெல்லும் முனைப்பில் பாஜகவும், பழைய நிலையை கொண்டு வர வேண்டும் என்று அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும், இந்த முறை அதியசம் நிகழ்த்த வேண்டும் என்று காங்கிரசும் நம்பிக்கையுடன் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது.
இப்படி உ.பி தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவின் உதவியாளர் வீட்டில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

அதிரடி ரெய்டு
உ.பி.யின் மாவ் மாவட்டத்தில் உள்ள அகிலேஷ் யாதவின் உதவியாளரும், சமாஜ்வாடி கட்சித்தலைவருமான ராஜீவ் ராயின் வீட்டில் நேற்று இந்த சோதனை நடந்தது.வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அகிலேஷ் யாதவின் உதவியாளர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

தொலைபேசிகள் ஒட்டு கேட்பு
உ.பி.யில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த திட்டங்களை ராஜீவ் ராய் விமர்சித்த நிலையில் அவரது வீட்டில் வேண்டுமென்றே சோதனை நடத்தியதாக சமாஜ்வாடி கட்சியினர் தெரிவித்தனர். இந்த நிலையில் பாஜக ஆட்சியில் எங்கள் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படுகின்றன என்று அகிலேஷ் யாதவ குற்றம்சாட்டியுள்ளார்.

பாஜகவின் தந்திரங்கள்
'எங்களது கட்சி தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படுகின்றன. எல்லா மாலைப்பொழுதும் உ.பி முதல்வர் ஒலிப்பதிவுகளைக் கேட்கிறார். இந்த ரெய்டுகள் அனைத்தும் தேர்தலில் பாஜக தோற்கப் போகிறது என்பதற்கான அறிகுறியாகும்'' என்று அகிலேஷ் யாதவ கூறியுள்ளார். தேர்தல் நெருங்கும்போது பாஜகவின் இத்தகைய தந்திரங்கள் மேலும் அதிகரிக்கும் எனவும் அவர் புகார் கூறினார்.

உபயோகி
இப்போது வருமான வரித்துறை வந்துவிட்டது; அடுத்து அமலாக்க இயக்குநரகம் வரும்; அதனை தொடர்ந்து சிபிஐ வரும் என்று கூறிய அகிலேஷ் யாதவ், யோகி குறித்து பிரதமர் மோடி கூறிய யுபியோகி(மிகவும் பயனுள்ள) என்ற வார்த்தையை உபயோகி" (பொருத்தமற்ற/பயனற்ற) என்று குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications