"ராகுலுக்கு பிரிட்டனில் குடியுரிமை!" பாஜக பிரமுகர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த அலகாபாத் ஐகோர்ட்
லக்னோ: காங்கிரஸின் மூத்த தலைவரும் ரேபரெலி எம்பியுமான ராகுல் காந்திக்கு பிரிட்டன் நாட்டிலும் குடியுரிமையை இருப்பதாக கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக பிரமுகர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மத்திய அரசு தெளிவான காலக்கெடுவை வழங்காததைக் காரணம் காட்டி வழக்கை அலகாபாத் ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவர் ராகுல் காந்தி. இவர் இப்போது ரேபரெலி தொகுதியில் எம்பியாக இருக்கிறார். இவருக்குப் பிரிட்டன் நாட்டில் குடியுரிமை இருப்பதாகச் சொல்லிக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக பிரமுகரும், வழக்கறிஞருமான விக்னேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ராகுல் காந்தி குடியுரிமை வழக்கு தள்ளுபடி
இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை இல்லை என்பதால்.. அவர் பிரிட்டன் குடியுரிமை வைத்திருந்தால் எம்பியாக இருக்க முடியாது. ராகுல் காந்தி பிரிட்டன் குடிமகன் என்பதால் அவரது இந்தியக் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு விசாரித்து வந்தது. இதற்கிடையே இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அதைத் தள்ளுபடி செய்வதாக அலகாபாத் ஐகோர்ட் அறிவித்துள்ளது.
நீதிபதிகள் ராஜீவ் சிங் மற்றும் ஏ.ஆர். மசூதி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்த நிலையில், பொது நல வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதேநேரம் மத்திய அரசு இந்த விஷயத்தில் இறுதி முடிவை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரு நாட்டு அரசு தொடர்பான விவகாரம் என்பதால், இந்த விவகாரம் மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள் உள்ளது என்பதையும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
நீதிமன்றம் உத்தரவு
இந்த விசாரணையை முடித்து, ஒரு முடிவு எட்டப்பட்டதும் மனுதாரரான எஸ். விக்னேஷ் ஷிஷிருக்கு அது குறித்துத் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். பொது நல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள போதிலும், கூடுதல் சட்ட உதவிக்காக மனுதாரர் தேவையென்றால் மீண்டும் நீதிமன்றத்தை நாடும் சுதந்திரத்தையும் வழங்கியுள்ளது.
மத்திய அரசுக்கே உரிமை
இந்த விவகாரத்தில் விசாரணையை எப்போது முடிக்க முடியும் என்பதை மத்திய அரசால் துல்லியமாகச் சொல்லவில்லை என்பதைக் குறிப்பிட்ட நீதிபதிகள், தெளிவான காலக்கெடு இல்லாததால் வழக்கை நிலுவையில் வைத்திருப்பதில் அர்த்தமில்லை என்று தெரிவித்தனர். அதைத் தொடர்ந்தே மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள் வேறு சட்ட ரீதியான தீர்வுகளை நாட மனுதாரருக்கு உரிமை இருப்பாகவும் குறிப்பிட்டனர்.
முன்னதாக நடந்த விசாரணையில் இந்த விவகாரத்தில் தெளிவான அறிக்கையைச் சமர்ப்பிக்கத் தவறியதாக உள்துறை அமைச்சகத்தை மத்திய அரசு வழங்கியிருந்தது. ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமையைப் பெற்றுள்ளதாக மனுதாரர் குற்றஞ்சாட்டியிருந்தார். இருப்பினும், அதைப் பிரிட்டன் அரசிடம் கேட்டு உறுதி செய்ய முடியாததால் மத்திய அரசு கூடுதல் அவகாசம் கோரியிருந்தது.
தள்ளுபடி செய்ய என்ன காரணம்
அப்போது மத்திய அரசு இந்த விவகாரத்தில் தெளிவான பதிலை இன்று வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், இன்றைய தினமும் தெளிவான காலக்கெடுவை வழங்க முடியாததாலேயே அலகாபாத் ஐகோர்ட் இந்த மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.
சுப்பிரமணியன் சுவாமி
பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் இதேபோன்ற வழக்கை டெல்லி ஐகோர்ட்டில் தொடர்ந்துள்ளார். இருப்பினும், அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கைச் சுட்டிக்காட்டி, இந்த வழக்கு விசாரணை முடிந்த பிறகு சுப்பிரமணியன் சுவாமியின் வழக்கை விசாரிப்பதாக டெல்லி நீதிமன்றம் கூறியிருந்தது. இப்போது அலகாபாத் ஐகோர்ட் இந்த மனுவை தள்ளுபடி செய்துள்ள நிலையில், சுப்பிரமணியன் சுவாமியின் மனுவும் தள்ளுபடி செய்யப்படும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications