“நாளைக்கு நீதிபதி ரூமுக்குள்ள என்ன இருக்குனு கேட்பீங்க..” - பாஜக நிர்வாகியை விளாசிய ஐகோர்ட்!
லக்னோ: தாஜ்மஹாலில் பூட்டப்பட்டுள்ள அறைகளைத் திறக்க தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிய மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தாஜ்மஹாலில் இந்து சிலைகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய பூட்டியுள்ள 22 அறைகளை திறக்க இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிடக் கோரி பா.ஜ.க நிர்வாகி டாக்டர் ரஜ்னீஷ் சிங் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்சில் மனு தாக்கல் செய்தார்.
ம.பி.யில் கொடூரம்.. உணவுக்கு பணம் கேட்ட 6 வயது சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற போலீஸ்காரர்
இந்த வழக்கு விசாரணை அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளையில் நீதிபதி டி.கே.உபத்யா மற்றும் சுபாஷ் வித்யார்த்தி அமர்வில் இன்று நடைபெற்றது.
தாஜ்மஹால் மர்மங்கள்
இந்த வழக்கு விசாரணையின்போது மனுதாரர் ரஜ்னீஷ் சிங் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "தாஜ்மஹாலில் மறைந்துள்ள உண்மையை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த அறைகள் பூட்டப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், பூட்டப்பட்டுள்ள அறைகளில் பல மர்மங்கள் உள்ளன. அது என்ன என்பது பொதுவெளிக்கு கொண்டுவரப்பட வேண்டும்." என வாதிட்டார்.
புதைந்துள்ள உண்மைகள்
அதற்கு உத்தர பிரதேச அரசு வழக்கறிஞர், தாஜ்மஹால் தொடர்பான வழக்கு ஏற்கனவே ஆக்ரா நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது எனச் சுட்டிக்காட்டினார்.
அதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கில் நிலம் யாருடையது என்று நாங்கள் கேட்கவில்லை. தாஜ்மஹாலில் புதைந்துள்ள உண்மைகள் வெளிவர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். மேலும் தாஜ்மஹாலின் வயது தொடர்பாக சந்தேகம் எழுப்பும் சில தரவுகளும் இணைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.
இதற்கா நாங்கள் இருக்கிறோம்
மனுதாரரின் வழக்கறிஞருக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த நீதிபதிகள் தாஜ்மஹாலின் வயதை சந்தேகிக்கிறீர்கள் என்றால், ஷாஜகான் தாஜ்மஹாலை கட்டவில்லை எனக் கூறுகிறீர்களா? தாஜ்மஹால் யார் கட்டியது என்று தீர்ப்பு கூறவா இன்று நீதிமன்றம் கூடியுள்ளது? எந்த அடிப்படையில் நீங்கள் நீதிமன்றத்தை அணுகினீர்கள் என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
கேலிக்கூத்து ஆக்காதீர்கள்
தொடர்ந்து, தாஜ்மஹால் குறித்து உண்மை கண்டறியும் குழு அமைக்க வேண்டும். மேலும் பூட்டப்பட்ட அறைகளுக்குள் செல்ல தங்களை அனுமதிக்க வேண்டும் என மீண்டும் மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், இது தொடர்பாக ஆய்வுப் படிப்புகளில் உங்களை இணைத்துக்கொண்டு ஆய்வு செய்ய கோருங்கள். அனுமதி மறுக்கப்பட்டால் நீதிமன்றத்தை நாடுங்கள். நாளை நீதிபதிகளின் சேம்பருக்குள் செல்லவும், ஆய்வு செய்யவும் அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் கோருவீர்களா? பொதுநல வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை கேலிகூத்து ஆக்காதீர்கள் என காட்டமாகத் தெரிவித்தனர்.
மனு தள்ளுபடி
மேலும், எந்த சட்டத்தீன் கீழ் தாஜ்மஹாலை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என கோருகிறீர்கள் என பிற்பகல் 2 மணிக்குள் பதிலளியுங்கள் எனக் கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.
பின்னர் பிற்பகலில் நடைபெற்ற விசாரணையில், " முற்றிலும் நியாயமற்ற பிரச்சினையில் தீர்ப்பு வழங்க மனுதாரர் கோரியுள்ளார். மனுதாரர் கொண்டு வந்துள்ள பிரச்சினை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்க்கப்பட வேண்டியது." எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.