"ஆபாச கமெண்ட்.." பெண் ஆசிரியரிடம் கிளாஸ் ரூமிலேயே அத்துமீறிய மாணவர்கள்! பாய்ந்தது வழக்கு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பெண் ஆசிரியரிடம் மாணவர்கள் சிலர் மிக மோசமான செயல்களில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா காலத்தில் முழுமையாக ஆன்லைன் மூலமே பள்ளி மற்றும் கல்லூரிகளில் வகுப்புகள் நடந்தன. இப்போது கொரோனா குறைந்துள்ள நிலையில், இப்போது மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், நாட்டில் பல இடங்களில் பள்ளி வரும் மாணவர்கள் அத்துமீறும் வகையில் சில மோசமான சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இது மாணவர்களின் ஒழுக்கம் குறித்த கேள்விகளை எழுப்புவதாக உள்ளது.

உத்தரப் பிரதேசம்
இதற்கிடையே அப்படியொரு அர்ச்சி சம்பவம் தான் இப்போது உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது. அங்கு மீரட் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் பெண் ஆசிரியர் பாடம் நடத்தும் போது, அவரிடம் முறையற்று பேசியுள்ளனர். மேலும், அவர் பள்ளியில் நடந்து செல்லும் போதும், அவரை பார்த்து ஐ லவ் யூ என்றும் கத்தியுள்ளனர். இதை அந்த மாணவர்கள் வீடியோவாகவும் பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவும் அந்த வீடியோ பரபரப்பைக் கிளப்பி உள்ளது.

மோசமான கருத்துகள்
அதில் அந்த பெண் ஆசிரியர் பாடம் நடத்தும் போது, குறுக்கிடும் அந்த மாணவர்கள் தகாத மோசமான கருத்துக்கள் கூறுவது தெளிவாகக் கேட்கிறது. 28 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், மூன்று மாணவர்கள் இணைந்து கொண்டு அந்த ஆசிரியை வகுப்பில் பாடம் நடத்தும்போது, குறுக்கிட்டு அவரிடம் ஐ லவ் யூ என்று சொல்வது கேட்கிறது. இதை அதே வகுப்பில் இருக்கும் மற்ற மாணவிகள் கேட்டுச் சிரிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது

ஐ லவ் யூ
அதே ஆசிரியை பள்ளியில் நடந்து செல்லும் போது, அவரை பார்த்து மீண்டும் மோசமான கருத்துகளைக் கூறும் மாணவர்கள், மீண்டும் அவரை பார்த்து ஐ லவ் யூ என்று கத்துவதும் அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. பாடம் சொல்லித் தரும் ஆசிரியை என்று கூட பார்க்காமல் இப்படி அத்துமீறிய மாணவர்கள், இதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளனர். இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

பாய்ந்தது வழக்கு
இந்தச் சம்பவம் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவை வைத்துச் சம்மந்தப்பட்ட மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மீது ஐடி, பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட மாணவர் ஒருவரின் தங்கையிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அவருக்கு இதில் எதாவது தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

தமிழகம்
கொரோனாவுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட போது தமிழ்நாட்டிலும் கூட ஆங்காங்கே ஆசிரியர்களை மாணவர்கள் மரியாதையற்ற முறையில் நடத்தும் சம்பவங்கள் நடந்தன. ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது, அவர்களை மரியாதையற்ற முறையில் மாணவர்கள் பேசிய வீடியோக்கள் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியது. இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை எச்சரித்தே பின்னரே இதுபோன்ற சம்பவங்கள் குறைந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications