நீர்ப்பாசனத்திற்கு இலவச மின்சார திட்டம்! விரைவில் உ.பி முழுவதும் அமல்படுத்தப்படும்.. யோகி உறுதி
லக்னோ: விவசாயிகளுக்கு நீர் பாசன வசதிக்காக உத்தரப் பிரதேச அரசு இலவச மின்சாரத்தை வழங்கும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உறுதியளித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. பல்வேறு துறைகளில் யோகி அரசு அவ்வப்போது சில அதிரடி திட்டங்களையும், மாற்றங்களையும் அறிவித்து வருகிறது. இந்த திட்டங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்நிலையில், விரைவில் விவசாயிகளுக்கு நீர் பாசன வசதிக்கான மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது பாஜக இந்த வாக்குறுதியை கொடுத்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து சில மாதங்கள் ஆன நிலையில் தற்போது வரை இந்த வாக்குறுதியை பாஜக நிறைவேற்றவில்லை. இது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வியெழுப்பி வந்தன. இதற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதிலளித்துள்ளார். அதாவது, "2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இது தொடர்பாக ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் முதற்கட்டமாக 14 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள். அதேபோல மின்சார கட்டணத்தை உயர்த்தும் எண்ணமும் எங்களுக்கு கிடையாது.

கடந்த ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் எதற்கும் முறையாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எனவே இந்த திட்டங்கள் அரசு குறிப்பில் மட்டும்தான் இருக்கிறது. இதுபோன்று பாஜக அரசு ஒருபோதும் பொறுப்பற்ற முறையில் செயல்படாது. இன்றைக்கு உத்தரப் பிரதேசத்தின் வேளாண் நிலம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வேளாண் ஊக்குவிக்கப்பட்டுள்ளது. கரும்புதான் மாநிலத்தின் முதன்மை பயிர் அதையே கடந்த கால ஆட்சியாளர்கள் அழித்துவிட்டார்கள்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications