கவலை வேண்டாம்.. அடிப்படை வசதிகளில் உ.பிதான் 'டாப்'! பாஜக அரசு குறித்து யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேச மக்களுக்கு சாலை, மின்சாரம், வீடுகள் என அனைத்து அடிப்படை வசதிகளையும் பாஜக அரசு சிறப்பாக கட்டமைத்திருப்பதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
ராமநவமி விழாவையொட்டி கோரக்பூரில் கன்யா பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த அவர் இக்கருத்தை கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதனை பாஜக சிறப்பாக கொண்டாடி வருகிறது. ஆனால், உத்தரப் பிரதேசத்தில் நிலவி வரும் வேலையின்மை, உட்கட்டமைப்புகளில் உள்ள குளறுபடிகள், சாதி, மத பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் தீவிரமான விமர்சனமாக முன்வைத்து வருகின்றன. இந்த நிலையில்தான் யோகி ஆதித்யநாத் மேற்குறிப்பிட்டவாறு கூறியுள்ளார்.

கன்யா பூஜை நிகழ்ச்சிக்கு பின்னர் மக்கள் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து மனு கொடுத்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட அவர், "உத்தரப் பிரதேசத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சிறப்பான அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இதில் சில குளறுபடிகள், சில பிரச்னைகள் இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. ஆனால், இந்த குறைகள் அனைத்தும் உடனுக்கு உடன் சரி செய்யப்பட்டு வருகின்றன. உத்தரப் பிரதேசத்தை பொறுத்த அளவில் இங்கு யாருக்கும் வீடு இல்லை என்கிற நிலை இருக்கக்கூடாது. ஆகவே அனைவருக்கும் வீடு என்பதை உறுதி செய்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
விரைவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அனைவருக்கும் சொந்த வீடு உறுதி செய்யப்படும். அதேபோல நீங்கள் கொடுத்த மனுக்களில் சாலை வசதிகள் குறித்து குறிப்பிட்டுள்ளீர்கள். அனைத்து ஊரக பகுதிகளிலும் தரமான சாலை அமைக்கப்படுவதை உத்தரப் பிரதேச அரசு உறுதி செய்து வருகிறது. எனவே இது குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அதேபோல அதிக அளவிலான மின் கட்டணம் குறித்து பெண் ஒருவர் மனு கொடுத்திருக்கிறார். அவருக்கு தவணை முறையில் மின் கட்டணம் செலுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதேபோல அவருடைய மின் கட்டணத்தை குறைக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மேலும், காவல்துறை மற்றும் வருவாய் தொடர்பான பிரச்சனைகளில் உடனடி தீர்வு காணப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். ஒட்டுமொத்தமாக உத்தரப் பிரதேசம் இதர மாநிலங்களுக்கு ஓர் உதாரணமாக இருந்து வருகிறது" என்று கூறியுள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தின் அனைத்து மக்களவை தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்று பாஜக திட்டமிட்டு வருகிறது. இதனையடுத்து பல்வேறு திட்டங்களை யோகி ஆதித்யநாத் அறிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications