பேஸ்புக்கில் வீடியோ போட்ட சிறுவன்..அமெரிக்காவிலிருந்து வந்த போன்.. வீடு வீடாக தேடிய போலீஸ்..பரபரப்பு
லக்னோ: சமூக வலைத்தளங்களில் லைக் பெற ஆசைப்பட்டு 10-வயது சிறுவனும் செய்த சம்பவமும் பேஸ்புக் தலைமையகமான அமெரிக்காவில் தொடங்கி உத்தர பிரதேச மாநில போலீசார் வரை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த விவரத்தை பார்க்கலாம்.
சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடக்கும் பலரும் தங்கள் புகைப்படங்கள் மட்டும் இன்றி வித்தியாசமாக எதையாவது பதிவிட்டு அதிக லைக்குகளை பெற வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர்.

இணையத்திலும் சில வித்தியாசமான வீடியோக்களும் வேகமாக பரவி பலரது கவனத்தையும் ஈர்ப்பதால் இப்போதொல்லாம் ஆபத்தை உணராமல் பலரும் வித்தியாசமாக சில செயல்களை முயற்சி செய்து பார்க்கிறார்கள்.
குறிப்பாக பைக்கில் வீலிங் செய்வது உள்பட பல சாகசங்களில் ஈடுபடும் 2 கே கிட்ஸ்கள் பிறகு வம்பிலும் மாட்டிக்கொள்கின்றனர். இது போல பல நிகழ்வுகளை சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வகையில்தான் தற்போது உத்தர பிரதேசத்தை சேர்ந்த 10-வயது மாணவர் ஒருவர் பேஸ்புக் லைவில் சென்று கொசு மருந்தை குடித்து தற்கொலை செய்யப்போவதாக வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்.
இதனை பார்த்த அமெரிக்காவில் உள்ள பேஸ்புக் தலைமையகத்தில் உள்ள அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக சிறுவன் இருக்கும் இடத்தை கண்டறிந்து இந்திய அரசுக்கு தகவல் கொடுத்துள்ளது. மத்திய அரசும் இது குறித்து உத்தர பிரதேச மாநில போலீசாருக்கு அலர்ட் செய்துள்ளது.
உத்தர பிரதெச போலீசாரும் உடனடியாக சிறுவனை காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியில் நொடிப்பொழுது கூட தாமதிக்காமல் களத்தில் இறங்கியிருக்கிறது. சிறுவனின் பேஸ்புக் பதிவு லொகேஷனை வைத்து அவனது இருப்பிடத்தை கண்டறிந்த உத்தர பிரதேச போலீசார், அங்குள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, கவுதம் புத் நகர் போலீசாரும் நள்ளிரவு 1.30 மணியளவில் சிறுவனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு சென்று பார்த்த போதுதான் போலீசாருக்கு பெரும் ட்விஸ்ட் காத்திருந்தது. போலீசார் இவ்வளவு பரபரப்பாக வந்து பார்த்தால்..சிறுவனோ நன்கு குறட்டை விட்டு தூங்கிக் கொண்டு இருந்து இருக்கிறான். போலிசார் அவனை எழுப்பி நடந்த சம்பவம் குறித்து கேட்டுள்ளனர்.
அப்போது இன்ஸ்டாகிராமில் அதிக வியூஸ் பெற வேண்டும் என்பதற்காக இப்படி செய்ததாகவும் கொசு மருந்தில் உள்ள திரவத்தை எடுத்து விட்டு தண்ணீர் நிரப்பி குடித்ததாகவும் கூறியிருக்கிறான்.. இதைக் கேட்டு ஒரு நொடி தலைசுற்றிப்போன போலீசார், சட்ட விதிப்படி சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருக்கின்றனர். அங்கும் அவன் விபரீதமாக எதையும் குடிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து சிறுவனுக்கு அறிவுரை கொடுத்த போலீசார்.. இனிமேல் இப்படி செய்யக்கூடாது என்று எச்சரித்து விட்டுள்ளனர்.
இன்றைய இளம் தலைமுறையினர் சமூக வலைத்தளங்களே கதி என மூழ்கி கிடப்பதாலும் சமூக வலைத்தளங்களில் கிடைக்கும் லைக்குகளை பெரிதாக எண்ணி இப்படி விபரீத செயல்களில் ஈடுபடுவதும் அவர்களின் எதிர்காலத்தையும் பாழ்படுத்தும் என்று கவலை தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள்..வளரும் தலைமுறை சமூக வலைத்தளங்களே கதி என கிடக்கக் கூடாது எனவும் அறிவுறுத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications