யோகியின் அசத்தலான திட்டம்.. உ.பியில் நவீன வசதிகளுடன் 57 மாவட்டங்களில் அமைகிறது 'மாதிரி பள்ளிகள்'
லக்னோ: உத்தர பிரதேசத்தில் 57 மாவட்டங்களில் முதல்வரின் மாதிரி கூட்டு பள்ளிகள் அமைக்க அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் வெள்ளிக்கிழமை முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 'PM Shri' பள்ளிகளின் மேம்பாட்டு திட்டம் குறித்து ஆய்வு செய்தார். மேலும் இது தொடர்பாக அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டுதல்களையும் அளித்தார். இது தொடர்பாக உத்தர பிரதேச மாநில முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உத்தர பிரதேசத்தில் உள்ள 18 டிவிஷன்களில் அடல் ரெசிடன்ஷியல் பள்ளிகள் செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இனி புதிய கோணத்தில் நாம் முன்னேறி செல்ல வேண்டும். அதாவது, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆரம்ப பள்ளி முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய தரமான பள்ளிகளை நிறுவ வேண்டும். இது மட்டும் இன்றி அடல் ரெசிடன்ஷியல் பள்ளிகளை தவிர, முதல்வரின் மாதிரி கூட்டு பள்ளிகள் அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
மீதமுள்ள 57 மாவட்டங்களில் இந்த பள்ளிகளை அமைக்க வேண்டும். முதல்வரின் மாதிரி கூட்டு பள்ளிகள் 5 முதல் 10 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட வேண்டும். இதற்காக மாவட்டங்களில் நிலங்களை அடையாளம் காணும் பணியை முடிந்த அளவு விரைவாக முடிக்க வேண்டும். ஆரம்பத்தில் ஒவ்வொரு வகுப்பும் மூன்று பிரிவுகளை கொண்டதாக இருக்க வேண்டும்.
இந்த பள்ளிகளில் முதல்வர், ஆசிரியர் மற்றும் பிற ஊழியர்களுக்கு குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் இந்த பள்ளிகளில் இருக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்பறையிலும் ஸ்மார்ட் கிளாஸ் இருக்க வேண்டும். ரோபோட்டிக்ஸ் மற்றும் மெஷின் கற்றல் மையம் இருக்க வேண்டும். இந்த பள்ளியில் அறிவியல் மற்றும் கணித பாடத்திற்கான கூட்டு ஆய்வகங்கள் இருக்க வேண்டும்.
9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வேதியியல் மற்றும் இயற்பியலுக்கான ஆய்வகம், 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிணி ஆய்வகம் தனித்தனி நூலகங்கள் அமைக்க வேண்டும். அது மட்டும் இன்றி 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மல்டிபிள் ஆக்டிவிட்டி ஹால், ப்ளே கிரவுண்ட், திறந்த வெளி ஜிம், சோலார் பேனல், மழை நீர் சேகரிப்பு மையம், மாணவர்களுக்கான டைனிங் ஹால் உள்ளிட்ட வசதிகளும் இருக்க வேண்டும்.
நவீன தீ தடுப்பு கருவி, ஆன்லைன் சிசிடிவி கேமரா ஆகியவற்றையும் அமைக்க வேண்டும்" என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக கூறப்பட்டுள்ளது. 'PM SHRI திட்டம் பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்டது. அடிப்படை கல்வியை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் 1,725 பள்ளிகள் உத்தர பிரதேசத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications