"நாய்கள் கூட எங்கள் உணவை சாப்பிடாது" - உ.பி.யில் போலீஸ் காவலர் கதறல் - பரவும் வீடியோ
லக்னோ: "எங்களுக்கு வழங்கப்படும் உணவை நாய்கள் கூட சாப்பிடாது" என்று உத்தரபிரதேசத்தில் காவலர் ஒருவர் கதறியழுதபடி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோஸாபாத்தில் காவல்துறையினருக்கு உணவு சமைத்து வழங்குவதற்காக போலீஸ் கேண்டீன் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான போலீஸாருக்கு உணவு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த கேண்டினுக்கு வெளியே இன்று காலை மனோஜ் குமார் என்ற காவலர் ஒருவர் கையில் உணவு தட்டை ஏந்தியபடி கதறி அழுது தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார். இதனை அங்கிருந்த மற்றொரு காவலர் தனது செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் காவலர் மனோஜ் குமார், "ஃபிரோஸாபாத் போலீஸ் கேண்டீனில் மிகப்பெரிய முறைகேடு நடைபெறுகிறது. இங்கு போலீஸாருக்கு மிகவும் மோசமான உணவே வழங்கப்படுகிறது. சரியாக சமைக்கப்படாத சப்பாத்தியும், தண்ணீர் போன்ற பருப்புமே எங்களுக்கு தினமும் வழங்கப்படுகின்றன. உண்மையில் சொல்லப்போனால் இந்த உணவை நாய்கள் கூட சாப்பிடாது. ஆனால் இந்த உணவை தான் நாங்கள் சாப்பிடுகிறோம்.
12 மணிநேரம் வேலை செய்துவிட்டு இந்த தரமில்லாத உணவை சாப்பிட முடியுமா? உணவு ஏதும் இல்லாமல் எங்களால் எப்படி மக்களுக்காக பணியாற்ற முடியும்? இதுகுறித்து எங்கள் உயரதிகாரிகளுக்கு தெரிவித்த போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால்தான் தற்போது இந்த விஷயத்தை வெளியே கூற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. காவல்துறைக்கு பல கோடி நிதியை அரசு ஒதுக்கினாலும், எங்களுக்கு ஊட்டச்சத்து இல்லாத உணவே வழங்கப்படுகிறது. அரசு வழங்கும் நிதியை ஃபிரோசாபாத் முதுநிலை எஸ்.பி.யும், துணை ஆணையரும் மோசடி செய்கின்றனர். அவர்கள் இந்த உணவை சாப்பிடுவார்களா அல்லது அவர்களின் பிள்ளைகளுக்கு இதுபோன்ற உணவை கொடுப்பார்களா?" என அவர் கூறினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியதை அடுத்து, ஃபிரோஸாபாத் கேண்டீனில் வழங்கப்படும் உணவு குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக உ.பி. காவல்துறை டிஜிபி தெரிவித்துள்ளார். இதனிடையே, உணவு தரம் குறித்து புகார் கூறிய காவலர் மனோஜ் குமாரிடமும் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications