'உபி வன்முறைக்கு அமைச்சரின் மகன் முழு காரணம்.. யோகி அரசு இதற்கு ஓப்பான உதவுகிறது..' விவசாயி பகீர்
லாக்னோ: உத்தரப் பிரதேசத்தில் போராடிக் கொண்டிருந்த விவசாயிகள் மீது 3 எஸ்யுவி கார்கள் மோதி 8 பேர் கொல்லப்பட்ட நிலையில், இந்த காரை உபி அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் தான் ஓட்டி வந்ததாக இந்த விபத்தில் காயமடைந்த விவசாயி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மத்திய அரசு கடந்த ஆண்டு மூன்று புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்திருந்தது. இந்த புதிய சட்டங்கள் விவசாயிகளின் உரிமைகள் பறிக்கும் வகையில் உள்ளதாகக் கூறி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே 10 கட்டங்களுக்கு மேலாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும், அதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.

கார் விபத்து
இந்த புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். அதன்படி பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் மட்டுமின்றி, உத்தரப் பிரதேசத்திலும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக அமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்படி நேற்று முன்தினம் உபி-இல் நடைபெற்ற வந்த விவசாயிகள் போராட்டத்தில் திடீரென 3 எஸ்யுவி கார்கள் புகுந்தது. இந்த விபத்தில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சரின் மகன்
இதில் விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி சென்றது உபி உள் துறை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்ஐஆரிலும் அஜய் மிஸ்ராவின் மகன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விபத்தில் காயமடைந்த விவசாயி தேஜிந்தர் விர்க் கூறுகையில், "72 மணி நேரங்கள் கடந்த பிறகும், அஜய் மிஸ்ராவின் மகன் கைது செய்யப்படவில்லை. இது துரதிருஷ்டவசமானது. மத்திய அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் எங்களைக் கொலை செய்யச் சதி நடந்துள்ளது.

விவசாயிகள் போராட்டம்
கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர் அஜய் மிஸ்ரா உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகளை அனுமதிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். அவர் கூறியதற்கு எதிராகவே நாங்கள் போராட்டம் நடத்தினோம். போலீஸ் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்துடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருந்தோம். அவருக்கு எதிராகக் கறுப்புக் கொடி காட்டும் போராட்டத்தையே நடத்தினோம். அவர் மாற்றுப்பாதையில் சென்றுவிட்டதாகக் கூறினார்கள். இதனால் நாங்கள் திரும்பிச் செல்ல ஆரம்பித்தோம்.

கார் விபத்து
அப்போது யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று படு வேகமாக வந்த கார்கள் பின்னால் இருந்து எங்கள் மீது மோதியது. அவர்கள் வேண்டுமென்றே எங்கள் மீது மோதினர். காரில் அஜய் மிஸ்ராவின் மகனும் அவரது ஆட்களும் இருந்தனர். கார் மோதியதும் நான் சுயநினைவை இழந்துவிட்டேன். இதனால் கோபமடைந்த விவசாயிகள் அமைச்சரின் கார் மீது தாக்குதல் நடத்தினர். எங்கள் ஆட்களில் சிலர் தான் அவர்களைக் கூட காப்பாற்றி போலீசில் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்.

யோகி அரசு உதவுகிறது
இந்த வழக்கில் சாட்சியமாக நான் தயாராக இருக்கிறேன். ஓப்பனாக சொல்லுவேன் யோகி ஆதித்யநாத் அரசு தாக்குதல் நடத்தியவர்களுக்கு உதவுகிறது" என்று அவர் தெரிவித்தார். அதேநேரம் வேறு சில விவசாயிகள் காரை ஓட்டியது யார் என்று தெளிவாகப் பார்க்க முடியவில்லை என்று தெரிவித்தனர். அனைத்தும் மிக வேகமாக நடந்ததாகவும் கார் மின்னல் வேகத்தில் வந்து விவசாயிகள் மீது மோதியதால் யார் காரை ஓட்டினார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் விவசாயிகள் கூறினர். இருப்பினும், இது தொடர்பான காட்சிகளைப் பார்த்தால் யார் கார் ஓட்டினார்கள் எனத் தெளிவாகத் தெரியும் என்று குறிப்பிட்டனர்.

அமைதியைச் சீர்குலைக்க முயற்சி
அதுமட்டுமின்றி கார் விபத்து ஏற்பட்ட பிறகு, காரின் உள்ளே இருந்து 4 முதல் 5 பேர் வரை வெளியே வந்து போராடும் விவசாயிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் காயமடைந்த விவசாயிகள் கூறினர். விவசாயிகள் போராட்டம் அமைதியாக நடந்து கொண்டிருந்ததாகவும் அதைச் சீர்குலைக்க வேண்டுமென்றே அவர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த விபத்தில் 19 வயதான லவ்ப்ரீத் சிங் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications