தரிசனத்துக்கு மறுப்பு.. காசி கோயில் ஊழியர்கள் கரார்! கடுப்பான பக்தர்கள் - கலவரமான கருவறை
லக்னோ: வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலில் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அங்கு வந்த பக்தர்களுக்கும் கோயில் ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்திய அளவில் புகழ்பெற்ற கோயிலான காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று மாலை 2 பக்தர்கள் காசி கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்று இருக்கிறார்கள்.

தரிசனத்துக்கு மறுப்பு
அப்போது கோயில் ஊழியர்கள் கருவறையை மூடி ஆரத்தி எடுத்துக் கொண்டிருந்தனர். இதனால் ஏமாற்றமடைந்த அந்த 2 பக்தர்கள், சாமி தரிசனம் செய்வதற்காக கருவறையை திறக்குமாறு கோரி இருக்கின்றனர். இதற்கு கோயில் ஊழியர்கள் 4 பேர் மறுப்பு தெரிவித்து உள்ளனர். இதனால் பக்தர்கள் இருவரும் கோயில் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கருவறைக்குள் கைகலப்பு
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு கருவறைக்குள் புகுந்தனர். அங்கு இருதரப்பினரும் ஒருவர் மீது மற்றொருவர் தாக்கிக்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த மேலும் சில கோயில் ஊழியர்கள் தகராறில் ஈடுபட்ட 2 பக்தர்களை கருவறையில் இருந்து வெளியேற்றினர்.

போலீசில் புகார்
இது தொடர்பாக காசி விஸ்வநாதர் கோயில் நிர்வாகத்துக்கு ஊழியர்கள் கடிதம் எழுதி இருக்கின்றனர். அதில் பக்தர்கள் தங்கள் மீது தாக்குதல் நடத்தும்போது போலீசார் உதவிக்கு வரவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டி உள்ளார்கள். அதே நேரம் அந்த 2 பக்தர்களுக்கு கோயில் ஊழியர்கள் 4 பேர் உட்பட 5 பேர் மீது காவல்நிலையத்தில் புகாரளித்து இருக்கின்றனர். சாமி தரிசனத்துக்கு தங்களை அனுமதிக்காததுடன், தங்களை கோயில் ஊழியர்கள் கடுமையாக தாக்கியதாக அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

சிசிடிவி காட்சி
இதற்கிடையே கோயில் கருவறைக்குள் இரு தரப்பினர் மோதிக்கொள்ளும் சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக கோயிலில் தரிசனம் செய்வது தொடர்பாக காவல்துறையினருக்கும் கோயில் ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை கண்டித்து கோயில் ஊழியர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் பிரச்சனை சரி செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications