"நான் தான் ஓட்டுவேன்" வந்தே பாரத் ரயிலை இயக்க மோதல்.. சட்டை கிழிய சண்டை போட்ட லோகோ பைலட்கள்
லக்னோ: வந்தே பாரத் ரயிலை யார் இயக்குவது என்பதில் ஏற்பட்ட போட்டியில் லோகோ பைலட்கள் சட்டை கிழியும் அளவிற்கு சண்டை போட்டுக்கொண்ட காட்சி இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. கங்காபூர் சிட்டி சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த மோதலை பயணிகள் தங்கள் செல்போனில் படம் பிடித்தனர்.
வழக்கமாக ரயில்களில் ஏறுவதற்கு பயணிகளுக்கு இடையேதான் போட்டா போட்டி நடக்கும்.. அதிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் சீட் பிடிப்பதற்காக முண்டியடித்துக் கொண்டு ரயில்களில் ஏறுவார்கள். சில சமயங்களில் அடிதடி வரை சென்று பயணமே செய்ய முடியாத அளவுக்கு கூட சிலருக்கு அன்றைய நாள் மாறிவிடும்..

இதெல்லாம் அவ்வப்போது நடப்பதை பார்க்க முடியும். ஆனால், ரயிலை இயக்குவதற்கு லோகோ பைலட்கள் இடையே சண்டை நடந்த வினோத சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த சம்பவம் எப்போது, எங்கு நடைபெற்றது என்ற விவரத்தை பார்க்கலாம்.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் இருந்து ராஜஸ்தானின் உதய்பூர் வரை வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் தொடங்கி வைக்கப்பட்ட இந்த வந்தே பாரத் ரயிலை இயக்குவது தொடர்பாக ஆக்ரா மற்றும் கோடா ரயில்வே டிவிஷன் ஊழியர்களுக்கு இடையே மோதல் இருந்து வருகிறது. வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கிய முதல் நாளிலேயே இரண்டு டிவிஷனை சேர்ந்த ஊழியர்களும் ரயிலை இயக்குவதற்காக மோதிக்கொண்டனர்.
இந்த நிலையில், நேற்று முன் தினம் மீண்டும் இரண்டு டிவிஷன்களில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு வந்தே பாரத் ரயிலுக்குள் ஏற முயன்றனர். இதில் கை கலைப்பு சூழலும் ஏற்பட்டது. சட்டைகளும் கிழிந்தன. வந்தே பாரத் ரயிலின் கார்டு ரூம் லாக் மற்றும் முன்பக்க கண்ணாடியும் சேதம் அடைந்தது.
ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில்வே போலீசார், சண்டையை விலக்கி விட முயன்றனர். இந்த பிரச்சினையை ரயில்வே வாரியத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அவர்களாலும் தீர்வு ஏற்படுத்த முடியவில்லை. இதனால் ரயில்சேவை தாமதம் ஆனது. வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே லோகோ பைலட்கள் இடையே நடந்த மோதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கங்காபூர் சிட்டி சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த மோதலை பயணிகள் தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். இந்தக் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வந்தே பாரத் ரயிலை பொறுத்தவரை அதிநவீன வசதிகள் கொண்டதாக உள்ளது. முழுவதும் ஏசி வசதி கொண்ட இந்த ரயில் அதிவேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இந்த ரயில்களில் தானியங்கி கதவுகள், பயோ டாய்லட்கள், பெரிய ஜன்னல்கள், தானியங்கி தீ தடுப்பு கருவி என பல்வேறு நவீன அம்சங்கள் உள்ளன. நாடு முழுவதும் 54 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications