அதிர்ச்சி.. பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய தூதரக ஊழியர்.. அதிரடியாக கைது செய்த அதிகாரிகள்
லக்னோ: இந்தியத் தூதரகத்தில் பணிபுரிந்த நபர் ஒருவர் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தாக ரஷ்யாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பிற்கு உளவு பார்த்ததாக ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணிபுரியும் ஊழியரை உத்தரப்பிரதேச தீவிரவாத தடுப்பு பிரிவு (ஏடிஎஸ்) கைது செய்துள்ளது. இப்போது கைது செய்யப்பட்டுள்ள இந்த நபர் சதேந்திர சிவால் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கீழ் ரஷ்யாவில் எம்டிஎஸ் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இந்திய ராணுவம் தொடர்பான ரகசியத் தகவல்களை வெளியுறவு அமைச்சகத்தில் பணிபுரியும் நபர்கள் மூலம் ஐஎஸ்ஐ ஏஜெண்டுகள் சேகரிக்க முயல்வதாக ஏடிஎஸ் உளவுத்துறைக்கு கிடைத்த ரகசியத் தகவல் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த ஆப்ரேஷனில் இவர் கைது செய்யப்பட்டார். உள்நாட்டில் தாக்குதல் நடத்தவும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் பேராபத்தை ஏற்படுத்தும் தகவல்களை அவர் சேகரிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
ஹபூரில் உள்ள ஷாமஹியுதின்பூர் கிராமத்தில் வசிக்கும் சதேந்திர சிவால் என்பவர் இதில் முக்கியமான நபராக இருந்துள்ளார். அவர் மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றி வந்த நிலையில், அதன் மூலம் ரகசிய ஆவணங்கள் அவர் கைகளுக்கு வந்துள்ளன.. பணத்திற்காக ஆசைப்பட்டு அவர் பாதுகாப்பு அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய ராணுவம் தொடர்பான முக்கியமான தகவல்களை ஐஎஸ்ஐ ஏஜெண்டுகளுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவரை கடந்த சில காலமாக உளவு துறையினாற் கண்காணித்து வந்துள்ளனர். சிவல் நடவடிக்கைகளில் சந்தேகம் இருந்த நிலையில், அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு ஏடிஎஸ் சம்மன் அனுப்பியது. விசாரணையின் போது அவரிடம் பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
இருப்பினும், அவர் அளித்த பதில்கள் திருப்திகரமாக இல்லாத நிலையில், அதிகாரிகள் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இதனால் வேறு வழியில்லாமல் உளவு பார்த்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து மீருட்டில் வைத்து அவரை அதிகாரிகள் கைது செய்தனர். சதேந்திர சிவால் கடந்த 2021 முதல் மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications