அயோத்தி ராமர் கோவிலில் குடும்பத்துடன் கவுதம் அதானி தரிசனம்.. ஏஐ நுண்ணறிவு ஆய்வகத்துக்கு உறுதி
லக்னோ: அதானி குழும தலைவர் கவுதம் அதானி தனது குடும்பத்தினருடன் அயோத்தி ராமர் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது நிஷுல்க் குருகூல் மகாவித்யாலயாவிற்கு ஆதரவு , பாரம்பரியக் கல்வியுடன் நவீன தொழில்நுட்பத்தை இணைக்க செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வகம் அமைக்கவும் உறுதியளித்தார்.

நம் நாட்டின் முன்னணி தொழிலதிபராக இருப்பவர் கவுதம் அதானி. இவர் நேற்று தனது மனைவி ப்ரீத்தி அதானி, மகன் கரண் அதானி, மருமகள் பரிதி அதானி ஆகியோருடன் இந்தியாவின் முக்கிய ஆன்மீக தலமாக இருக்கும் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
இதுபற்றி கவுதம் அதானி கூறுகையில், ''ஹனுமன் ஜெயந்தியையொட்டி கோவிலில் தரிசனம் செய்தேன். இது அளவற்ற மகிழ்ச்சியை தருகிறது. கோவில் வழிப்பாட்டு தலம் மட்டுமில்லை. இந்திய நாகரிக விழுமியங்கள், ஒற்றுமை மற்றும் தேசிய நம்பிக்கையின் அடையாளமாக உள்ளன. ராமபிரானின் லட்சியங்களான உண்மை, கடமை, கருணை, சேவை ஆகியவை நாட்டின் எதிர்கால பயணத்தை செதுக்கும்'' என்றார்.
தரிசனத்துக்கு பிறகு கவுதம் அதானி கோவிலில் இருந்து ள ஸ்ரீ நிஷுல்க் குருகூல் மகாவித்யாலயாவுக்குச் சென்றார். அங்கு மாணவர்கள், ஆசிரியர்களுடன் விரிவாக உரையாடினார். சுவாமி தியாகானந்த் ஜி அவர்களால் 1935-ல் நிறுவப்பட்டு, ஆர்ய சமாஜக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இந்தக் குருகுலம், பாரம்பரியக் கல்வி முறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இது நெருக்கமான ஆசிரியர்-மாணவர் உறவு, அறம் சார்ந்த கற்றல், ஒழுக்கமான உறைவிடச் சூழல் மூலம் முழுமையான கல்வியை வழங்குகிறது. பண்டைய அறிவு மரபுகளைப் பாதுகாத்து, மாணவர்களிடையே அறிவுசார் ஆர்வத்தையும் ஒழுக்கத்தையும் இது வளர்த்து வருகிறது. சுமார் 200 மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கும் இந்தக் குருகுலம் மாணவர்கள் மீதான தனது அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.
இதன் வளாகத்தில் கேசாலை உள்ளது. மாணவர்கள் சமஸ்கிருத ஸ்லோகங்களை ஓதினர். இது குருகுல அமைப்பின் ஒழுக்கத்தையும் மரியாதையையும் வெளிப்படுத்தியது. அதானி ஆசிரியர்கள், மாணவர்களுடன் உரையாடி, பாரம்பரியக் கல்வி அழியாத விழுமியங்களில் வேரூன்றி, எப்படி மேம்படுகிறது என்பதை அறிந்தார். "சேவையே சாதனை" என்ற தனது தத்துவத்தின் அடிப்படையில் சேவை தான் தொடர்ச்சியான சமூக அர்ப்பணிப்பு என்று கூறினார்.
இதுபற்றி கவுதம் அதானி, ''இந்தியா தொழில்நுட்பத்தில் முன்னேறும் இக்காலகட்டத்தில், இத்தகைய நிறுவனங்கள் வலுவான கலாச்சார அடித்தளத்தை பராமரிப்பது முக்கியம். பாரம்பரியத்தையும் நவீனத்துவத்தையும் இணைக்க, அதானி ஃபவுண்டேஷன் குருகுலத்திற்கு செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வகத்தை நிறுவ உள்ளது. இது புதிய தொழில்நுட்பங்களை பாரம்பரிய கற்றலுடன் இணைத்து, எதிர்காலத்திற்குத் தேவையான திறன்களை மாணவர்களுக்கு வழங்கும்'' என்றார்.
கவுதம் அதானி ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர். பிரயாக்ராஜ் மகா கும்பமேளா, புரி ரத யாத்திரை போன்ற முக்கிய மத நிகழ்வுகளில் பங்கேற்றார். இப்போது அயோத்தி ராமர் கோவிலுக்கு குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications