மித மிஞ்சிய கூட்டம்.. இளைஞர்களால் ஸ்தம்பித்து போன ரயில் நிலையம்.. என்னாச்சு?.. பரவும் வீடியோ!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் நடந்த அரசு வேலைக்கான எழுத்து தேர்வில் கலந்துகொள்வதற்காக ரயில் நிலையங்களிலும்.. பேருந்து நிலையங்களிலும் இளைஞர்கள் கூட்டம் அலைமோதும் வீடியோ காட்சி இணையத்தில் பரவி வருகிறது.
நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் இன்று காலை முக்கிய நகரங்களில் இளைஞர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது. நேற்றும் இதே நிலைதான் நீடித்தது.
ரயில் நிலையங்களிலும் பேருந்து நிலையங்களிலும் எங்கும் இளைஞர்கள் தலைகளாகவே தென்பட்டன.

திடீரென கூட்டம்
பேருந்துகளின் படியில் தொங்கிய படியும்.. பேருந்துகளை பிடிக்கவும் இளைஞர்கள் ஓடும் காட்சிகளும் ரயில்களில் மித மிஞ்சிய காணப்பட்ட வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. நேற்றுத்தான் இப்படி இருந்தது என்றால் இன்று நிலை அதை விட மோசமாக இருந்தது. விடுமுறை தினங்களில் இப்படி திடீரென கூட்டம் அலைமோதுவதற்கு என்ன காரணம் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் விவாதிக்க தொடங்கியிருந்தனர்.

அரசு பணிகளுக்கான எழுத்துத் தேர்வு
உத்தரபிரதேசத்தில் அரசு பணிகளுக்கான எழுத்துத் தேர்வு (UPSSSC) நேற்றும் இன்றும் நடைபெறுகிறது. இந்த தேர்வை எழுதவே இந்த அளவுக்கு இளைஞர்கள் கூட்டம் திரண்டது தெரியவந்துள்ளது. UP-PET - எனப்படும் முதல் நிலை தகுதித்தேர்வு நேற்றும் இன்றும் நடைபெற்று வருகிறது. தொலை தூரங்களில் மாவட்ட தலைநகரங்களில் மட்டுமே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதாக தேர்வர்கள் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த தேர்வுக்காகத்தான் தொலை தூர பகுதியில் இருந்து வந்த இளைஞர்கள் பலர் தேர்வு மையங்களுக்கு சென்றுள்ளனர். இதனால், கட்டுக்கடங்காத கூட்டம் எங்கும் தென்பட்டுள்ளது என்ற விவரம் தெரியவந்துள்ளது.

37 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள்...
37 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் இந்த தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்து இருந்தனர். இதனால், தேர்வு எழுத இளைஞர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்று தெரிந்து இருக்கும். ஆனாலும் இதை முறையாக கணித்து அரசு உரிய ஏற்பாடுகளை செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். பாஜகவை சேந்த எம்.பி வருண் காந்தி கூட, உத்தர பிரதேச அரசு உரிய ஏற்பாடுகளை செய்யவில்லை என்று அதிருப்தியை தெரிவித்து இருந்தார்.

குரூப் - சி பணிகளுக்காக
இது தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்த வருண் காந்தி, முதல் நிலை தகுதித் தேர்வு எழுத வரும் தேர்வர்களுக்கு உரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும். இல்லையென்றால் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று காட்டமாக பதிவிட்டு இருந்தார். குரூப் - சி பணிகளுக்காக நடத்தப்படும் இந்த தேர்வு இரண்டு ஷிப்ட்களாக நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் 12 மணி வரையும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையும் நடைபெறுகிறது.

மிதமிஞ்சிய கூட்டம்
இந்த தேர்வு எழுதுவதற்காக இரண்டு நாட்களாக இளைஞர்கள் பட்டாளம் ரயில் , பேருந்து நிலையங்களில் அலை மோதியது. உத்தரபிரதேசத்தின் முக்கிய நகரங்களான கான்பூர், வாரணாசி, பிரக்யாராஜ் உள்ளிட்ட பகுதிகளில் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் மிதமிஞ்சிய கூட்டம் காணப்பட்டது.












Click it and Unblock the Notifications