உபியே ஆடிப்போச்சு.. பாஜக பிரமுகரே இப்படியா? பசு கடத்தியவரை பிடித்து அடித்து போலீசிடம் கொடுத்த மக்கள்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பசுக்களை கடத்திச் சென்றதற்காக பாஜகவை சேர்ந்த பஞ்சாயத்து தலைவரின் கணவர் உட்பட 7 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியை அடுத்த பஹேடி பகுதியில் ட்ராக்டர்களில் ஏராளமான பசுக்கள் ஏற்றப்பட்டுக் கொண்டு இருந்தன. அதில் கால்நடைகள் மிகவும் நெருக்கமாக நிறுத்தப்பட்டு இருப்பதை காவலர் ஒருவர் பார்த்து இருக்கிறார். உடனே அவர்களை தடுத்து நிறுத்துவதற்காக துரத்தி சென்றார்.

அங்கிருந்து வேகமாக சென்ற டிராக்டரின் பின்னாலேயே ஃபரித்புர் நகர்ப்புற பஞ்சாயத்து தலைவரின் காரும் சென்றது. அதில் பாஜக கொடியும் ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டு இருந்தது. சிங்குட்டி கிராமத்தை அடுத்துள்ள வனப்பகுதியில் ஷார்தா நதியின் கரை அருகே சென்ற இந்த டிராக்டரில் இருந்து பசுக்கள் கீழே தள்ளிவிடப்பட்டன.
இதனை கண்ட கிராமவாசிகள் அங்கு ஒன்றுகூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பாஜக தலைவரின் கணவர் தேவ்தத் ராஜ் உடன் காரில் அமர்ந்திருந்த ஐந்து பேரும் கிராம வாசிகளை மிரட்டத் தொடங்கினர். இதனால் கோபமடைந்த கிராம வாசிகள் அவர்களை காரில் இருந்து இறங்க சொல்லி கடுமையாக தாக்கி தரையில் உட்கார வைத்தனர்.
தகவல் கிடைத்தவுடன் காவல் ஆய்வாளர் ஷ்ரவன் குமார் சிங் தலைமையில் அங்கு வந்த போலீசார், சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட கார், ட்ராக்டர் ட்ராலியை காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். பாஜக பிரமுகர் உட்பட 7 பேர் மீது பசுவதை, விலங்குகள் கடத்தல், மிருக வதை உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து கிராம மக்கள் தெரிவிக்கையில், "இரவு சுமார் 10 மணிக்கு மூன்று ட்ராக்டர் ட்ராலிகள் கால்நடைகளை நிரப்பி சிங்குட்டி கிராமத்திற்கு அருகில் ஓடும் ஷார்தா ஆற்றின் கரைக்கு கொண்டு செல்வதைக் கண்டோம். இதனால் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து ஒரு ட்ராக்டர் ட்ராலி வந்தது.
அதன் பின்னால் பாஜக கொடி பொருத்தப்பட்ட காரும் சென்று கொண்டிருந்தது. அதில் ஃபரித்புர் நகர்ப்புற பஞ்சாயத்து தலைவர் என்று எழுதப்பட்டு இருந்தது. உடனே கிராம மக்கள் சிலர் அந்த காரை துரத்தி சென்றோம். அதன் பின்னர் ஒட்டுமொத்த கிராம மக்களும் ஒன்றுகூடிவிட்டனர்.
பசுக்களை கடத்தி செல்வதை அறிந்த பின் பாஜக நகர பஞ்சாயத்து தலைவரின் கணவர் உட்பட ஏழு பேரையும் கிராமவாசிகள் கடுமையாக தாக்கினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஏழு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் கடத்தி சென்ற மூன்று மாடுகள் இறந்துவிட்டன. பல கால்நடைகள் காயமடைந்து உள்ளன." என்றனர்.












Click it and Unblock the Notifications