ரொம்ப பெருமையா இருக்கு! யோகி ஆதித்யநாத் குறித்து தாய் பெருமிதம்
லக்னோ: உத்தர பிரதேச முதல்வராக இன்று மாலை யோகி ஆதித்யநாத் 2வது முறையாக பதவியேற்க உள்ளார். இதுகுறித்து அவரது தாய் சாவித்ரி தேவி, ‛‛ரொம்ப பெருமையாக உள்ளது. அவனது சாதனை மகிழ்ச்சியளிக்கிறது. நாங்கள் எப்போதாவது அவனிடம் பேசுவோம். ஆனால் அடிக்கடி டிவியில் பார்க்கிறோம்'' என தெரிவித்தார்.
Recommended Video
உத்தர பிரதேசத்தில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. முதல்வராக யோகி ஆதித்யநாத் இன்று மாலை பதவியேற்க உள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர்.
இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்பட பாஜக முன்னணி தலைவர்களும், பிற கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

உத்தரகாண்டில் குடும்பம்
யோகி ஆதித்யநாத்தின் குடும்பத்தினர் அவரது சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் பவ்ரி கர்வால் அருகே பஞ்சூர் கிராமத்தில் வசிக்கின்றனர். அங்கு எளிய வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் யோகி ஆதித்யநாத் குறித்து அவரது தாய், சகோதர, சகோதரிகள் பெருமையாக கூறியுள்ளனர். அதன் விபரம் வருமாறு:

தாய் பெருமிதம்
இந்நிலையில் யோகி ஆதித்யநாத் குறித்து அவரது தாய் சாவித்ரி தேவி பெருமையாக கூறியுள்ளார். இதுபற்றி இன்று அவர் கூறுகையில், ‛‛உத்தரபிரதேசத்தின் முதல்வராக எனது மகன் 2வது முறையாக பதவியேற்க உள்ளார். பெருமையாக உள்ளது. அவரது சாதனை மகிழ்ச்சியளிக்கிறது. நாங்கள் எப்போதாவது அவனிடம் பேசுவோம். ஆனால் அடிக்கடி டிவியில் பார்க்கிறோம். மீண்டும் உத்தர பிரதேசத்தில் வெற்றி பெற்றதால் ஏராளமானவர்கள் வீட்டுக்கு வந்து எங்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க வந்து செல்கின்றனர்'' என்றார்.

சகோதரர், சகோதரி,
யோகி ஆதித்யாத் குறித்து அவரது சகோதரர் ஒருவர் கூறுகையில், ‛‛உத்தரகாண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றபோது எனது சகோதரரை (யோகி ஆதித்யநாத்) பார்த்தேன். நான் மருத்துவமனையில் இருந்து வந்து பார்த்தேன். அவரது பதவியேற்பு நிகழ்ச்சியை விழா போல் கொண்டாடுகின்றனர். இது பெருமையாக உள்ளது'' என்றார். யோகி ஆதித்யநாத்தின் சகோதரி சசிசிங் கூறும்போது, ‛‛யோகி ஆதித்யநாத்தை டிவியில் பார்த்து வருகிறேன். முதல்வராக பதவியேற்ற பிறகு வீட்டுக்கு வந்து தாயிடம் ஆசீர்வாதம் வாங்குவார் என நம்புகிறேன்'' என்றார்.

உருக்கமான கோரிக்கை
முன்னதாக நேற்று சசிசிங், யோகி ஆதித்யநாத்துக்கு உருக்கமான கோரிக்கை வைத்திருந்தார். அதாவது, வயதான அம்மாவை வந்து பார்த்து செல்லும்படியும், அவரது ஆசீர்வாதத்துடன் பதவியேற்றுக்கொள்ளும்படியும் கூறியிருந்தார். மேலும் வயதானாலும் யோகி ஆதித்யநாத் நினைப்பில் தாய் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

குடும்ப விபரம்
யோகி ஆதித்யநாத்தின் தந்தை பெயர் ஆனந்த் சிங் பிஷ்ட். வனக்காவலர். தாய் பெயர் சாவித்ரி தேவி. இவர்களுக்கு 1972 ஜூன் 5ல் யோகி ஆதித்யநாத் 2வது குழந்தையாக பிறந்தார். யோகி ஆதித்யநாத்துக்கு 4 சகோதரர்கள், 3 சகோதரிகள் உள்ளனர். இவரது இயற்பெயர் அஜய் சிங் பிஷ்ட் என்பதாகும். யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்ட் கொரோனா முதல் அலையின்போது இறந்தது குறிப்பபிடத்தக்கது.











Click it and Unblock the Notifications