வாரணாசி ஞானவாபி மசூதி வழக்கு.. நீதிபதியின் பாதுகாப்பு பற்றி கவலைப்படும் குடும்பத்தினர்.. என்னாச்சு?
லக்னோ: உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஞானவாபி மசூதி வளாக கோவில் தொடர்பான வழக்கில் வீடியோ பதிவு செய்ய வாரணாசி கீழமை நீதிமன்ற நீதிபதி ரவிகுமார் திவாகர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ‛வீட்டை விட்டு புறம்படும்போதெல்லாம் எனது பாதுகாப்பு பற்றி மனைவி பயப்படுகிறாள்' என அவர் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இதன் அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதியின் வளாகத்தில் பழமையான இந்து கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் இந்து பெண்கள் 5 பேர் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.
பாபர் மசூதி இடிப்பில் தொடர்புடைய கல்யாண்சிங், கெம்காவுக்கு பத்ம விபூஷண் விருதா? ரவிக்குமார் கண்டனம்
ஆண்டு முழுவதும் திறக்க மனு
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛ஞானவாபி மசூதி வளாகத்தின் மேற்கு சுவர் அருகே இந்து கோவில் உள்ளது. இது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் பிரார்த்தனை செய்ய அனுமதிக்க வேண்டும். இதுதவிர கோவில் வளாகத்தில் உள்ள பிற விக்கிரகங்கள் மற்றும் கண்ணுக்கு தெரியாத தெய்வங்களை வழிபட அனுமதிக்க வேண்டும்'' என மனு செய்தனர்.
வீடியோ பதிவு செய்ய எதிர்ப்பு
இந்த மனுவை வாரணாசி நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்று கொண்டது. மேலும் ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ளவும், ஆய்வை வீடியோ பதிவு செய்து மே 10க்குள் சமர்பிக்க உத்தரவிட்டது. இந்த பணி கடந்த வாரம் துவங்கி நடைபெற்றது. மசூதிக்குள் வீடியோ பதிவு செய்ய கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு முஸ்லிம் அமைப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் பணி தடைப்பட்டது.
மே 17 க்குள் சமர்பிக்க உத்தரவு
இதற்கிடையே இதுதொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடந்தது. அப்போது கமிஷனர் அஜய் குமார் மிஸ்ராவுடன் மேலும் 2 பேரை சர்வே கமிஷனில் சேர்த்த நீதிமன்றம், வீடியோ ஆதாரங்களை மே 17 க்குள் சமர்பிக்க உத்தரவிட்டுள்ளார். இதைதடுப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதி குடும்பத்தினர் அச்சம்
இந்த உத்தரவை வாரணாசி நீதிமன்ற நீதிபதி ரவி குமார் திவாகர் பிறப்பித்துள்ளார். இந்நிலையில் தான் தனது பாதுகாப்பு பற்றி குடும்பத்தினர் கவலைப்படுவதாக தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் "ஒரு சாதாரண விவகாரத்தை அசாதாரண பிரச்சனையாக மாற்றப்பட்டுள்ளதால் எனது பாதுகாப்பு குறித்து குடும்பத்தினர் பயப்படுகின்றனர். வீட்டை விட்டு வெளியேறும் போதெல்லாம் என் பாதுகாப்பு பற்றி மனைவி கவலைப்படுகிறாள். சர்வவே நடக்கும் இடத்திற்கு நான் செல்வதாக ஊடகங்களில் சில செய்திகள் வந்தன. எனது பாதுகாப்பு பற்றி கவலை உள்ளதாக கூறி அங்கு செல்ல வேண்டாம் என எனது தாய் கூறினார்'' என குறிப்பிட்டுள்ளார்.
ஓவைசி எதிர்ப்பு
இதற்கிடையே ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ள ஏஐஎம்ஐஎம் அமைப்பின் தலைவர் அசாதுதீன் ஓவைசி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பாபர் மசூதி போன்று இந்த மசூதியையும் இழக்க விரும்பவில்லை. இந்த ஆய்வை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.