பத்திரிகையும் அடிச்சாச்சு.. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா எப்போது? தேர்தலுக்கு முன்பே மோடி ரெடி
லக்னோ: வரும் ஜனவரி மாதம் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ள நிலையில் அதற்காக அழைப்பிதழ்களை தயாரித்து சிறப்பு விருந்தினர்களை அழைக்கும் பணி தொடங்கி இருக்கிறது.
உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ஜனவரி 22, 2024 அன்று ராமர் கோவில் திறக்கப்படவுள்ளது. இந்த நிலையில், 'ராம் லல்லா'வின் கும்பாபிஷேக விழாவிற்கு மக்களை அழைக்கும் நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளன. இதற்கான அழைப்பிதழ்களின் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன. அந்த காட்சிகளில், ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை தயாரித்து அனுப்பி வைக்கும் கடிதங்கள் இடம்பெற்று உள்ளன. அயோத்தியில் நடைபெறும் 'பிரான் பிரதிஷ்டா' எனப்படும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள சுமார் 6,000 பேருக்கு இந்த கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

ராமர் கோவிலின் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தனக்கு ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான முதல் கடிதம் கிடைத்ததாக சாமியார் ஒருவர் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து உள்ளார். தனக்கு தபால் மூலம் கடிதம் வந்ததாகவும், அழைப்பு கடிதம் கிடைத்த முதல் நபர் என்ற பெருமையைப் பெறுகிறேன் என்றும் அவர் கூறினார்.
அயோத்தியில் ராமர் கோவிலின் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ராம் லல்லாவின் மூன்று பதிப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன, இதில், சிறந்த பதிப்பு திறப்பு விழா நாள் நெருங்கி வரும்போது தேர்ந்தெடுக்கப்படும் என்று ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். ராம் லல்லாவின் மூன்று பதிப்புகள் யாரும் செல்ல முடியாத இடத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்த மாதத்தில் கருவறைக்குள் நிறுவப்படுவதற்கான இறுதி பதிப்பு தேர்ந்தெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி மகாராஜ் தானே, மகாராஷ்ட்ராவில் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “2024 ஜனவரி மாதத்தின் மூன்றாவது வாரத்தில், ராம் லல்லாவின் சிலை பிரதமர் நரேந்திர மோடியின் கைகள் மூலம் அதற்குரிய இடத்தில் நிறுவப்படும்” என்றார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் முகலாய பேரரசர் பாபரால் கிபி 1528 ஆம் ஆண்டு பாபர் மசூதி கட்டப்பட்டது. 495 ஆண்டுகள் பழமையான இந்த மசூதி அமைந்து உள்ள நிலத்தை ராம ஜென்ம பூமி என்று உரிமை கோரிய இந்துத்துவா அமைப்பினர் கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதியை இடித்தனர். அதன் தொடர்ச்சியாக பாபர் மசூதி நில வழக்கின் விசாரணை கீழமை நீதிமன்றம்தொடங்கி உச்சநீதிமன்றம் வரை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அமர்வு அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் இந்துத்துவ அமைப்பினரின் கோரிக்கையின்படி ராமர் கோயிலை கட்ட அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது. இதனை அடுத்து கோவிலின் அடிக்கல்லை பிரதமர் மோடி 2020 ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாட்டினார். அதன் தொடர்ச்சியாக ராமர் கோயில் கட்டுமானப் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. கடந்த மாதம், ராமர் கோவிலின் தரை வேலைப்பாடுகளின் படங்களை அறக்கட்டளை தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications