ஆஹா பிளான் மாறுதே! ரேபரேலியில் பிரியங்காவுக்கு நோ சான்ஸ்.. "அவரே" களமிறங்குகிறாராம்! காங்கிரஸ் பரபர
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் எனத் தகவல் வெளியானது. இதற்கிடையே அதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு என்று காங்கிரஸ் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
நமது நாட்டில் இப்போது லோக்சபா தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், இன்னும் 5 கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதில் உத்தரப் பிரதேசம் மாநிலம் ரொம்பவே முக்கியமானதாகும்.. ஏனென்றால் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து மட்டும் மொத்தம் 80 எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு வருகிறோம். அங்கு பாஜகவுக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது.
பிரியங்கா காந்தி: இதில் காங்கிரஸ் கோட்டையான அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏனென்றால், உத்தரப் பிரதேசத்தில் உள்ள அமேதி மற்றும் ரேபரேலி லோக்சபா தொகுதிகளில் காங்கிரஸ் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. அதில் இன்னுமே சஸ்பென்ஸ் நிலவி வருகிறது. கடந்த தேர்தல்களில் சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் அவரது மகள் பிரியங்கா காந்தி போட்டியிடலாம் எனச் சொல்லப்பட்டது. இதற்கிடையே லோக்சபா தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்பு குறைவு என்று இப்போது தகவல் வெளியாகியுள்ளது.
வாய்ப்பு குறைவு: இது குறித்து டெல்லி காங்கிரஸ் வட்டாரத்தில், "பிரியங்கா காந்தி இந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை.. பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் மட்டுமே ஈடுபடுவார்.. அதேநேரம் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அமேதி அல்லது ரேபரேலியில் போட்டியிடுவார். இது குறித்து நாளைக்குள் முடிவெடுக்கப்படும்" என்றார்.
முன்னதாக நேற்று நடந்த காங்கிரஸின் மத்திய தேர்தல் குழுக் கூட்டத்தில் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் முறையே ராகுல் மற்றும் பிரியங்கா போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறியதாகத் தகவல் வெளியானது. உபி மாநில காங்கிரஸ் நிர்வாகிகளும் கூட ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி போட்டியிடுவது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பூஸ்ட்டை தரும் எனக் கூறியதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தச் சூழலில் தான் பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்பு குறைவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகள் உட்பட 14 தொகுதிகளுக்கு ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவின் போது மே 20ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு வேட்புமனு தாக்கல் செய்ய மே 3ஆம் தேதியுடன் கால அவகாசம் நிறைவடையும் நிலையில், இன்று அல்லது நாளைக்குள் காங்கிரஸ் தனது வேட்பாளர்களை அறிவிக்கும் எனத் தெரிகிறது.
அமேதி: இதில் அமேதி தொகுதியில் 2004 முதல் 2014 தேர்தல்களில் காங்கிரஸின் ராகுல் காந்தி வெற்றி பெற்றிருந்தார். இருப்பினும், 2019இல் பாஜகவின் ஸ்மிருதி இராணி அங்கு வென்றார். அந்தத் தேர்தலில் ராகுல் காந்தியை விட 55 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று ஸ்மிருதி இராணி வென்றார். ராகுல் காந்தி அந்தத் தேர்தலில் தான் முதல்முறையாகக் கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிட்டு வென்றார். இந்த முறை வயநாட்டிற்கு ஏப்ரல் 26இல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், அவர் அமேதியில் போட்டியிடுவாரா என்பதில் சஸ்பென்ஸ் தொடர்கிறது.
ரேபரேலி: ரேபரேலி தொகுதியைப் பொறுத்தவரை அங்கு எம்பியாக இருந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராஜ்யசபா எம்பியானார். 2004 முதல் ரேபரேலி தொகுதியில் எம்பியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. உடல்நலக்குறைவு காரணமாகவே லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை என்று சோனியா காந்தி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications