லக்னோவில் அதிர்ச்சி.. பப்ஜிக்கு அனுமதிக்காத தாயை கொன்று நண்பர்களுடன் வீட்டில் படம் பார்த்த சிறுவன்
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பப்ஜி விளையாட தாய் அனுமதிக்காததை அடுத்து ஆத்திரம் அடைந்த 16 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தாயின் சடலத்துடன் இரு நாட்கள் தங்கியிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவை சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவர், மேற்கு வங்கத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி, 16 வயதில் ஒரு மகன், 10 வயதில் ஒரு மகள் ஆகியோர் இருந்தனர்.
தந்தை மேற்கு வங்கத்தில் பணியாற்றி வருவதால் அவர்கள் மூவரும் லக்னோவில் தனியாக வசித்து வந்தனர். அந்த 16 வயது மகன் லக்னோவில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார்.

பப்ஜி விளையாட்டு
பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான சிறுவன் எப்போதும் அந்த விளையாடி விளையாடி வந்துள்ளார். பள்ளியிலும் அந்த விளையாட்டு குறித்த சிந்தனையால் பாடத்தின் மீது நாட்டம் இல்லாமல் இருந்தது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் சிறுவனின் தாயை அழைத்து கண்டித்துள்ளதாக தெரிகிறது.

கடும் அதிருப்தி
இதனால் சில தினங்களாக கடும் அதிருப்தியிலும் மன உளைச்சலிலும் அந்தச் சிறுவன் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நள்ளிரவு யாருக்கும் தெரியாமல் செல்போனை எடுத்து பப்ஜி விளையாடி கொண்டிருந்தார். இதை சிறுவனின் தாய் பார்த்துவிட்டார். உடனே செல்போனை அவரிடம் இருந்து பறித்துவிட்டார்.

சிறுவன் ஆத்திரம்
இதனால் அந்த சிறுவன் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார். வீட்டில் பீரோவில் இருந்த தனது தந்தையின் கைத்துப்பாக்கியை எடுத்து தாயை நோக்கி சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சிறுவனின் தாய் உயிரிழந்துவிட்டார். தாய் இறந்ததை அறிந்த சிறுவன் அவரது உடலை மறைத்து வைக்க ஒரு அறையில் வைத்து பூட்டியுள்ளார்.

10 வயது தங்கை
இந்த சம்பவங்களை 10 வயது தங்கை பார்த்துவிட்டார். உடனே இந்த விஷயங்களை யாருக்கும் சொல்லக் கூடாது என மிரட்டிய அவர் அந்த சிறுமியையும் ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டார். பின்னர் தனது நண்பர்கள் இருவருக்கு போன் செய்துள்ளார். அவர்களை வீட்டுக்கு வரவழைத்த சிறுவன், இரவு உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு நண்பர்களுடன் இந்தி திரைப்படத்தை டிவியில் போட்டு பார்த்துள்ளார்.

சிறுவனிடம் தாய் எங்கே என கேட்ட நண்பர்கள்
நண்பர்கள் அந்த சிறுவனிடம் தாய் எங்கே என கேட்டதற்கு அவர் தனது அத்தையின் வீட்டுக்கு சென்றதாக கூறிவிட்டார். பின்னர் 2 நாட்கள் தாயின் உடலை அப்புறப்படுத்த தெரியாமல் விழித்துள்ளார். மேலும் துர்நாற்றம் வீசித் தொடங்கியதை அடுத்து வீடு முழுவதும் வாசனை திரவியத்தை அடித்துள்ளார்.

துர்நாற்றம் வீசியதால் சிக்கிய சிறுவன்
எனினும் அதையும் மீறி துர்நாற்றம் வீசியதால் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சிறுவனின் வீட்டுக்கு வந்த போலீஸார் தாயின் உடலை கைப்பற்றியதுடன் சிறுவனிடம் விசாரணை நடத்தியதில் திடுக் சம்பவங்கள் அம்பலமானது. வீட்டில் உள்ளவர்கள் தனியார் இருப்பதால் அவர்களின் பாதுகாப்புக்காக கைத் துப்பாக்கியை வீட்டில் வைத்து சென்றுள்ளார் அந்த ராணுவ அதிகாரி. மேலும் தாயை கொன்ற குற்றத்தையும் அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க போலீஸார் தயாராகி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications