அச்சுறுத்தும் லம்பி வைரஸ்.. வெளிமாநிலங்களில் இருந்து கால்நடைகளை கொண்டு செல்ல தடை.. யோகி உத்தரவு
லக்னோ: உத்தர பிரதேசத்தில் லம்பி வைரஸ் பரவல் பீதி ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் வகையில் பிற மாநிலங்களில் இருந்து உத்தர பிரதேசத்துக்கு கால்நடைகள் கொண்டு செல்ல தடை விதித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
கால்நடைகள் லம்பி வைரஸ் பாதிப்பு என்பது அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. பொதுவாக லம்பி வைரஸ் பாதிப்பு என்பது கால்நடைகளுக்கு பரவும் ஒரு வகை அம்மை நோயாகும். இது ஈ, கொசு, ஒட்டுண்ணிகள் மூலம் பரவும்.

இந்த வைரஸ் பாதித்த கால்நடைகளின் உடலில் கட்டி உருவாகும். மேலும் நோய் பாதித்த மாடுகளின் பால் குடிக்கும் கன்றுகளுக்கும் இந்த நோய் என்பது பரவும் தன்மை கொண்டாகும். இந்நிலையில் தான் உத்தர பிரதேச மாநிலத்தில் லம்பி வைரஸ் பாதிப்புக்கான பீதி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கால்நடை அதிகாரிகளுக்கு அதிரடியாக சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதன்படி மாநிலம் முழுவதும் லம்பி வைரஸ் பாதிப்பில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். நோய் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். அதோடு பிற மாநிலங்களில் இருந்து உத்தர பிரதேசத்துக்கு கால்நடைகள் கொண்டு வருவதை தடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மாநிலத்தில் கால்நடை கண்காட்சி நடத்துவதை தடுக்க வேண்டும். நோய் தொற்றின் அறிகுறிகளை அறிந்து முன்கூட்டியே சிகிச்சை வழங்க வேண்டும். இதுதொடர்பாக பால் பண்ணையாளர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். மேலும் பசு பாதுகாப்பங்களிலும் பிற கால்நடைகள் உள்பட மனிதர்களின் என்ட்ரியை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு லம்பி வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும்.
கொசுக்கள் மூலம் லம்பி வைரஸ் பரவல் ஏற்படுகிறது. இதனால் கிராமங்கள் மற்றும் நகரங்களில் ஊரக வளர்ச்சி, நகர்ப்புற வளர்ச்சி, கால்நடை பராமரிப்பு துறைகளை ஒருங்கிணைத்து தூய்மை பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டும். நோய் பாதித்த கால்நடைகளில் இருந்து பிற கால்நடைகளுக்கும் இந்த நோய் என்பது பரவ வாய்ப்புள்ளது. இதனால் நோய் பாதித்த கால்நடைகளை தனித்தனியே பராமரிக்க வேண்டும்.
தற்போது மாநிலத்தில் 6,889 கால்நடை பாரமரிப்பு மையங்கள் உள்ளன. இதில் மொத்தம் 11.89 லட்சம் பசுக்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பசு பாதுகாப்புக்கான முதல் அமைச்சர் சஹாபகீதா திட்டம் பசு பாதுகாப்பில் நல்ல பலனை தந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பசு உள்பட மாடுகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களின் குடும்பங்களுக்கு ஒரு மாட்டுக்கு ரூ.30 என உணவுக்கு ஒதுக்கப்படும் நிதியை ரூ.50 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்'' என கூறினார்.












Click it and Unblock the Notifications