Kumbh Mela 2025:உ.பி.பிரயாக்ராஜில் மகா கும்பமேளா இன்று தொடக்கம்! திரிவேணி சங்கமத்தில் நீராட குவிந்த பக்தர்கள்
லக்னோ: 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பமேளா இன்று உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் தொடங்குகிறது. இந்த விழாவில் 35 கோடி பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ், ஹரித்வார், நாசிக், உஜ்ஜைனி உள்ளிட்ட புனித நதிகளில் கும்பமேளா நடத்தப்படுகிறது. அதைத் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பமேளா நடத்தப்படுகிறது.

இது உலகின் மிகப் பெரிய ஆன்மீக மற்றும் கலாச்சார நிகழ்வாக விளங்குகிறது. இந்த விழா அடுத்த மாதம் 26ம் தேதி வரை 45 நாட்களுக்கு நடக்கும். மகா கும்பமேளாவில் 35 கோடி பக்தர்கள், துறவிகள், அகோரிகள் உள்ளிட்டோர் புனித நீராடுவார்கள் என தெரிகிறது.
மகா கும்பமேளாவையொட்டி பலர் பிரயக்ராஜில் குவிந்துள்ளனர். இந்த விழாவுக்காக உத்தரப்பிரதேச அரசு ரூ 7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த விழாவுக்கு வருவோர் தங்குவதற்காக 1 கோடி மக்கள் வரை தங்குவதற்கான கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவை காண வெளிநாடுகளில் இருந்து பலர் வருகை தந்துள்ளனர். பாதுகாப்பு பணிகளுக்காக 45 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் இணையும் திரிவேணி சங்கமத்தில் மக்கள் சென்று வர 30 தற்காலிக பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லி, கொல்கத்தா, ஜபல்பூர், டேராடூன் உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு விமானங்கள், ரயில்கள், பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த கும்பமேளாவில் புனித நீராடுதல் என்பது ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல், ஜனவரி 29ஆம் தேதி அமாவாசை, பிப்ரவரி 3 ஆகிய தேதிகள் முக்கியமானதாகும். மக்கள் எளிதாக கும்பமேளா பகுதிக்கு செல்ல 13 ஆயிரம் ரயில்கள் இயக்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications