"காந்தி"யை சுட்ட கும்பலுடன் முன்னாள் முதல்வர் செளகான், உமா பாரதி.. நடவடிக்கை எடுக்குமா பாஜக?
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் காந்தியின் உருவபொம்மையை துப்பாக்கியால் சுட்டபோது உடனிருந்த மத்திய அமைச்சர் உமா பாரதி, மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான் ஆகியோர் மீதுபாஜக மேலிடம் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உ.பி மாநிலம் அலிகாரில் இந்து மகா சபை அலுவலகத்தில் நேற்று காந்தியின் உருவபொம்மையை வைத்து, அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவரான பூஜா சகுண் பாண்டே துப்பாக்கியால் சுட்டார்.
அதோடு காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

13 பேர் மீது வழக்கு
இதையடுத்து இந்து மகா சபையினரின் செயலை நெட்டிசன்கள் வன்மையாக கண்டித்தனர். இதையடுத்து காந்தியின் உருவபொம்மையை சுட்ட 13 பேர் மீது அலிகார் போலீஸார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

செளகான், உமா பாரதி
இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுடன் மத்திய பிரதேச முதல்வராக இருந்த சிவ்ராஜ் சிங் செளகான், மத்திய அமைச்சர் உமா பாரதி உள்ளிட்டோர் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜீரணிக்க முடியாது
பிரதமர் மோடி அவ்வப்போது காந்தியின் கருத்துகளை கூறி வந்தாலும், மறுபக்கம் ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகள் காந்திக்கு உரிய மரியாதை தருவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. தேசத்தந்தையாக பார்க்கப்படும் காந்தியை இந்தியாவில் அதுவும் பாஜக ஆளும் மாநிலத்தில், வலது சாரி அமைப்புகளை சேர்ந்த சிலர் உருவபொம்மையை துப்பாக்கியால் சுடுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

என்ன நடவடிக்கை
அதிலும் இந்த சம்பவம் ஒரு மத்திய அமைச்சர், முன்னாள் முதல்வர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றதுதான் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி. ஊருக்கெல்லாம் உபதேசம் சொல்லும் அமித்ஷா, இந்த இருவர் மீதும் இந்து மகா சபை அமைப்பின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதே கேள்வியாக உள்ளது.












Click it and Unblock the Notifications