அரசு வேலைக்கு நான் கியாரண்டி.. சி.எம். செக்ரட்டரி செய்த செயல்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்
லக்னோ: உத்தரப்பிரதேச முதல்வரின் தனிச் செயலர் என்றும், போட்டித் தேர்வுகளில் நான் வெற்றி பெற வைக்கிறேன் என்றும் கூறி பொதுமக்களிடம் இருந்து பணத்தை வாங்கி மோசடி செய்த நபரை காவல் துறை சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சபீகாலமாக மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. புதிது புதிதாக யோசித்து களத்தில் இறங்கி பொதுமக்களை ஏமாற்றும் சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இரட்டிப்பு லாபம், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் என்பது போன்ற மோசடிகள், ஆன்லைன் மோசடி, கடன் கொடுப்பதாகக் கூறி மோசடி என ஆன்லைன், ஆஃப்லைன் என புது புது ரூட்டுகளில் மோசடிகள் நடந்து வருகின்றன.

அந்த வகையில், உத்தரப் பிரதேசத்தில் முதல்வரின் தனிச் செயலாளர் என்று கூறியும், போட்டித் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெற வைப்பதாகவும் கூறி ஏமாற்றிய நபரை சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், அசம்கர் மாவட்டத்தில் உள்ளது சஹாரியா கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த ஃபரூக் அமன் (26) என்பவர் தன்னை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தனிச் செயலாளர் என்று கூறிக் கொண்டு வந்துள்ளார். மேலும், போட்டித் தேர்வுகளில் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி எளிமையாக வெற்றி பெற வைப்பதாகவும், அதன் மூலம் அரசு வேலைகளில் நுழையலாம் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய அப்பகுதி மக்கள் ஃபரூக் அமரிடம் லட்சக்கணக்கில் பணத்தைக் கொடுத்துள்ளனர்.
இதுமட்டுமல்லாமல், ஃபரூக் அமன் அப்பகுதியில் ஆன்லைன் சூதாட்ட தொழிலையும் நடத்தி வந்துள்ளார். இதுகுறித்து காவல் துறை சிறப்பு அதிரடிப் படையினர் செப்டம்பர் 12 ஆம் தேதி லக்னோவில் இருந்த ஃபரூக் அமனை கைது செய்தனர். தொடர்ந்து, ஃபரூக் மீது சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரிடமிருந்து 2 மொபைல் போன்கள், ஆதார் கார்டுகள் மற்றும் பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சிறப்பு அதிரடிப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் தனிச் செயலாளராகப் பணியாற்றுவதாக கூறி அப்பகுதி மக்களை ஏமாற்றி வந்த விவேக் சர்மா எனும் பண்டு சௌதாரி என்கிற நபரை கடந்த ஜூன் 24 ஆம் தேதியன்று சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்தனர். விவேக் சர்மா அரசு அலுவலர்களை செல்போனில் தொடர்பு கொண்டு, முதல்வரின் தனிச் செயலாளர் என்று கூறி மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மேலும், ட்ரூகாலர் செயலியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் என்றும் அவர் பதிவு செய்து இந்த மோசடி வேலைகளில் ஈடுபட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், விவேக் சர்மா கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் செய்த குற்றங்கள் குறித்து ஒப்புக் கொண்டுள்ளார்.
இதையடுத்து, இவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இவர் மீது அலிகார், மதுரா, பல்ராம்பூர், கான்பூர் நகர், ஹர்தோய் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications