ஹத்ராஸ் கொடூரம்: ஜனாதிபதி தலையிடவேண்டும்....சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுங்கள் - மாயாவதி வலியுறுத்தல்
ஹத்ராஸ் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை அல்லது உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
லக்னௌ: ஹத்ராஸ் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை அல்லது உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் ஆரம்பகட்ட விசாரணையில் மக்கள் திருப்தியடையவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டின் குடியரசுத்தலைவர் உத்திரபிரதேசத்தில் இருந்து வந்து தலித் ஆவார், இந்த வழக்கில் தலையிட வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் சமீபத்தில் 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அங்குள்ள பல்ராம்பூர் மாவட்டத்தில் 22 வயது இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்து உள்ளார். இந்த இரு சம்பவங்களும் நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
ஹத்ராஸ்.. செய்தி சேகரிக்கவிடாமல் நிருபர்களை தடுப்பது ஏன்? டெல்லி பத்திரிக்கையாளர் சங்கம் கேள்வி
யோகி ஆதித்யநாத் பதவி விலக வலியுறுத்தல்
இந்த சம்பவங்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்து உள்ளார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அந்த பதவியில் இருந்து நீக்கி விட்டு தகுதியான வேறொருவரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பதவியில் இருந்து விலகுங்கள்
யோகி ஆதித்யாநாத்தை மாற்றாவிட்டால் உத்தரபிரதேசத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். மற்றவர்களின் சகோதரிகளையும், மகள்களையும் உங்களது சகோதரி மற்றும் மகளாக நீங்கள் கருத வேண்டும். அவர்களை பாதுகாக்க முடியாவிட்டால் முதல்வர் பதவியில் இருந்து விலகுங்கள் என்று தெரிவித்தார்.
சிபிஐ விசாரணை தேவை
மாயாவதி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ஹத்ராஸ் கொடூரமான கூட்டு பலாத்கார வழக்கு தொடர்பாக முழு நாட்டிலும் கடும் அதிருப்தி உள்ளது. ஆரம்ப விசாரணை அறிக்கையில் பொதுமக்கள் திருப்தி அடைவதாகத் தெரியவில்லை. எனவே, இந்த விவகாரத்தை சிபிஐ அல்லது உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரிக்க வேண்டும். இது பகுஜன் சமாஜ் கட்சியின் கோரிக்கை என்று பதிவிட்டுள்ளார்.
குடியரசுத்தலைவர் நீதி தர வேண்டும்
நாட்டின் குடியரசுத்தலைவர் உத்தரபிரதேசத்தில் இருந்து வந்து தலித் ஆவார், இந்த வழக்கில் தலையிட வேண்டும், உத்தரபிரதேச அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற மனப்பான்மையை மனதில் கொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று அவருக்கு ஒரு வேண்டுகோள் என்றும் அவர் மற்றொரு ட்வீட்டில் பதிவிட்டுள்ளார்.