ஸ்பெஷல்.. 6 கோடி வருடம் பழமையானது! அயோத்தி கோயிலில் ராமர், சீதை சிலைக்கு நேபாளத்திலிருந்து வந்த பாறை
அயோத்தி ராமர் கோயிலில் ராமர் மற்றும் சீதை சிலைகளை செதுக்குவதற்காக நேபாளத்தில் இருந்து 6 கோடி ஆண்டு பழமையான 2 பாறைகள் அயோத்திக்கு வந்துள்ளது
லக்னோ: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதில் வைக்கப்படும் ராமர் மற்றும் சீதையின் சிலைகளை செதுக்குவதற்காக நேபாளத்தில் இருந்து 6 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த 2 அரிய வகை பாறைகளை உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்திக்கு கொண்டு வந்து இருக்கிறார்கள்.
முகலாய பேரரசர் பாபரால் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தளமாக இருந்த பாபர் மசூதி அமைந்து இருந்த நிலத்தை ராம ஜென்ம பூமி என்று கூறி இந்துத்துவா அமைப்பினர் உரிமை கோரினர்.
இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இந்துத்துவா அமைப்பினரால் கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி தகர்க்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வெளியான தீர்ப்பு
இதனை அடுத்து பாபர் மசூதி நில வழக்கின் விசாரணை மற்றும் பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணை நீதிமன்றங்களில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அமர்வு நாடே எதிர்பார்த்த இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கியது.
ராமர் கோயில் கட்ட அனுமதி
பாபர் மசூதி அமைந்து இருந்த அயோத்தி இடத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. அத்துடன் அயோத்தியில் பாபர் மசூதிக்கு மாற்றாக இஸ்லாமியர்கள் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை வழங்க உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்டு 5 ஆம் தேதி ராமர் கோயிலுக்கு பூமிப்பூஜை செய்யப்பட்டது.
கோயில் திறப்பு எப்போது?
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். அத்துடன் ராமர் கோயிலின் தோற்றம் எப்படி இருக்கும் என்ற மாதிரி புகைப்படமும் வெளியிடப்பட்டது. ராமர் கோயில் கட்டுமான பணி பாபர் மசூதி இருந்த இடத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2024 ஆம் ஆண்டிற்குள் கோயில் கட்டுமான பணிகளை நிறைவு செய்து திறப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
யோகி ஆதித்யநாத் தகவல்
ரூ.1,800 கோடி மதிப்பில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அந்த பணிகள் 50 சதவீதம் வரை நிறைவு பெற்று இருப்பதாக கடந்த ஆண்டு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். இந்த ஆண்டின் இறுதிக்குள் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை முழுவதுமாக நிறைவு செய்ய இருப்பதாக அவர் கூறி உள்ளார்.
நேபாளத்தில் இருந்து வந்த சிலைகள்
இந்த நிலையில் கோயில் வைக்கப்படும் ராமர் மற்றும் சீதையின் சிலையை தயாரிப்பதற்காக நேபாளத்தின் 2 பாறைகள் அயோத்திக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. 6 கோடி ஆண்டுகள் பழமையான இந்த பாறைகளை விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தேசிய செயலாளர் ராஜேந்திர சிங் பங்கஜ் கொண்டு வந்தார்.
அரிய வகை பாறைகள்
நேபாளத்தின் காளி கண்டகி நதியிலிருந்து எடுக்கப்படும் ஷாலிகிராம் எனப்படும் இந்த அரிய வகை பாறைகள் 2 தனித்தனி லாரிகளில் நேபாளத்தின் முஸ்டாங் மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது. இதில் ஒரு பாறையின் எடை 26 டன் என்றும், மற்றொரு பாறையின் எடை 14 டன் எனவும் கூறப்படுகிறது. இந்த பாறைகளை அர்ச்சகர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் வரவேற்று மாலைகளால் அலங்கரித்து சடங்குகளை செய்தனர்.