உபி கொடூரம்! பிறந்த சில நொடிகளே ஆன பச்சிளம்.. கை நழுவி கீழே விழுந்ததால் பலி.. நடந்தது என்ன
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் மருத்துவமனையில், செவிலியரின் அலட்சியத்தால் அரங்கேறி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் பல மாநிலங்களில் மருத்துவ உட்கட்டமைப்புகள் மிக மோசமாக உள்ளதாகவும் அதை மேம்படுத்த வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்படுகிறது.
நாட்டில் சராசரியாக ஒவ்வொரு ஆயிரம் பேருக்கு 1.34 மருத்துவர்கள் உள்ளனர். இது உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையை ஒத்து இருந்தாலும், அனைத்து மாநிலங்களிலும் இது சமமாக இல்லை.

மருத்துவ கட்டமைப்பு
தமிழ்நாட்டைப் பொருத்தவரை சராசரியாக ஒவ்வொரு 253 பேருக்கு ஒரு மருத்துவர் உள்ளன். அதாவது கிட்டதட்ட ஆயிரம் பேருக்கு 4 மருத்துவர்கள். இது ஐரோப்பிய நாடுகளான நார்வே (4.3), சுவீடன் (4.2) நாடுகளுக்கு இணையானது ஆகும். அதேநேரம் நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் இதே நிலை இல்லை. உத்தரப் பிரதேசத்தில் ஒவ்வொரு 3767 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்திலேயே உள்ளது.

உத்தரப் பிரதேசம்
மருத்துவர்கள் மட்டுமின்றி செவிலியர்கள் போன்ற மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கையும் கூட குறைவாகவே உள்ளது. முறையான பயிற்சி பெற்ற மருத்துவ பணியாளர்கள் இல்லாததால் சில மோசமான விபத்துகளும் நடக்கிறது. உபி தலைநகர் லக்னோவில் உள்ள சின்ஹாட்டின் மல்ஹவுர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மிக மோசமான விபத்து ஒன்று அரங்கேறி உள்ளது. பிறந்து சில நிமிடங்களே ஆன பச்சிளம் குழந்தை செவிலியரின் கைகளில் இருந்து நழுவி தரையில் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

ஷாக் சம்பவம்
குழந்தைக்கு நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் கூட தலையில் ஏற்பட்ட காயமே மரணத்திற்குக் காரணம் என்பதை உறுதி செய்துள்ளது. இது தொடர்பாகச் செவிலியர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் ஏப்ரல் 19ஆம் தேதி நடந்துள்ளது. இருப்பினும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான், இந்த விஷயம் வெளி உலகத்திற்குத் தெரிய வந்துள்ளது.

போலீசார்
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கை விசாரணை செய்யும் அதிகாரி அபிஷேக் பாண்டே கூறுகையில், "மருத்துவமனையின் பரிந்துரையின் பேரில் குழந்தையின் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. ஏப்ரல் 20 ஆம் தேதி கிடைத்த பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக மரணம் ஏற்பட்டது" என்று அவர் மேலும் கூறினார். இது தொடர்பாக உயிரிழந்த குழந்தையின் தந்தையின் அளித்த புகாரின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை தேவை
இது குறித்து பல்வேறு பிரிவுகளின் கீழ் அந்த செவிலியர் மற்றும் மருத்துவமனையின் பிற ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், மருத்துவமனை மீதும், ஊழியர்கள் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

கணவர்
இது தொடர்பாக உயிரிழந்த குழந்தையின் தந்தை ஜீவன் ராஜ்புத் கூறுகையில், "கடந்த ஏப்ரல் 19இல் எனது மனைவிக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து நாங்கள் மருத்துவமனைக்குச் சென்றோம். குழந்தை முதலில் இறந்து பிறந்ததாகவே மருத்துவர்கள் என்னிடம் சொன்னார்கள். ஆனால் எனது மனைவியிடம் நான் பேசிய போது, நார்மல் டெலிவரி ஆனதாகவும் குழந்தை உயிருடன் இருப்பதைப் பார்த்ததாகவும் கூறினார்.

மிரட்டிய ஊழியர்கள்
மேலும், ஒரு செவிலியர், துண்டு ஏதுவுமின்றி குழந்தையை தன் கைகளில் எடுத்துச் செல்வதைக் கண்டதாகவும் அவர் கூறினார். அப்போது அந்த செவிலியர் கைகளில் இருந்து குழந்தை நழுவியதாகவும் அதைப் பார்த்ததும் என் மனைவி பீதியடைந்து கத்த ஆரம்பித்துள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரது வாயைப் பொத்தி, அமைதியாக இருக்கும்படி மிரட்டி உள்ளனர்" என்று கண்கலங்கியபடி கூறினார்.












Click it and Unblock the Notifications