ராம நவமி நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர்கள் நடத்த உபி யோகி அரசு உத்தரவு- நிதி ஒதுக்கீடு- புது சர்ச்சை!
லக்னோ: ராம நவமி நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர்கள் நடத்த வேண்டும் என்று உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் பிறப்பித்த உத்தரவு பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 75 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தார். ராம நவமி, அஷ்டமி முன்னிட்டு பல்வேறு மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர்கள் ஒருங்கிணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது.
பொதுவாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும்; உதவிகள் செய்யும். ஆனால் முன்னின்று அப்படியான மத நிகழ்ச்சிகளை நடத்துவது இல்லை. சமயம் சார்ந்த அரசு துறைகள் இத்தகைய சமய விழாக்களை நடத்திக் கொண்டிருக்கின்றன.

உத்தரப்பிரதேசத்தில் இந்துத்துவா கொள்கையை தீவிரமாக பேசுகிற முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசும் கூட இதே பாணியைத்தான் இதுவரை பின்பற்றி வந்தது. இப்போது முழு வீச்சில் இந்துத்துவா கொள்கையை செயல்படுத்தும் வகையில் ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தை களமிறக்கி இந்து மத நிகழ்ச்சிகளை நடத்தி சொல்லுகிறது. இதுதான் இப்போது சர்ச்சையின் மையமாக உள்ளது.

இத்தகைய மத நிகழ்ச்சிகளுக்கு ரூ1,00,000 அரசு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள், எந்த கோவிலில் யாரை வைத்து நிகழ்ச்சி நடத்துவது என முடிவு செய்யக் கூடிய வேலைகளில் ஈடுபடுவராம். இதற்காக அரசு அதிகாரிகள் குழுவும் கூட நியமிக்கப்பட்டிருக்கிறதாம். அதாவது பாஜகவின் இந்துத்துவா செயல்திட்டங்களை அமல்படுத்த உத்தரப்பிரதேசத்தில் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் களமிறக்கப்பட்டிருக்கிறது என்பதைத்தான் இந்த உத்தரவு வெளிப்படையாக சொல்கிறது. இது மதச்சார்பின்மை கோட்பாட்டுக்கு எதிரானது; மதச்சார்பின்மை கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்கக் கூடிய கேலிக் கூத்தும் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
நாட்டில் இந்து மத துறவி ஒருவர் முதல்வராக இருப்பது உபியில்தான். யோகி ஆதித்யநாத்தின் கோரக்பூர் மடத்தைப் பின்பற்றுகிறவர்கள் உ.பி மற்றும் நேபாளத்தில் கணிசமாக இருக்கின்றனர். இத்தகைய யோகி ஆதித்யநாத்தின் நடவடிக்கைகள் முற்று முழுதாக 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான நடவடிக்கை; இந்துக்களின் வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்தும் யுக்தி என்பதுதான் விமர்சனங்களின் பொது கருத்து. அதாவது இந்து ராஷ்டிரா என்கிற அஜெண்டாவை நோக்கிய நகர்வு இது என்பதும் விமர்சனம். அப்படியானால் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பது ஏட்டளவில்தான் இனி இருக்கப் போகிறதா? என்பதும் விமர்சகர்களின் கேள்வி.












Click it and Unblock the Notifications