நோ பார்க்கிங்கில் நின்ற அமைச்சரின் கார்.. எல்லாருக்கும் ரூல்ஸ் ஒன்று தான்! போலீசின் தரமான சம்பவம்
லக்னோ: பொதுமக்களாக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும் ஒரே ரூல்ஸ் தான் என சட்டசபை வளாகத்தில் ‛நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த அமைச்சரின் காரை போலீசார் ‛டோவிங்' செய்து இழுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தர பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். இவரது அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக சஞ்சய் நிசாத் செயல்பட்டு வருகிறார்.

சஞ்சய் நிசாத் மீன்வளத்துறை அமைச்சராக இருக்கிறார். இவர் நிசாத் கட்சியின் தலைவராக உள்ளார். இந்த கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில் சஞ்சய் நிசாத்துக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் சட்டசபை சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 11ம் தேதி தொடங்கி நடந்தது. இந்த சிறப்பு கூட்டத்தொடர் மொத்தம் 4 நாட்கள் நடந்தது. 14ம் தேதி கடைசி நாள் கூட்டத்தொடரில் ஸ்ரீ பங்கே பிகாரி கோவில் அறகட்டளை மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சமயத்தில் அமைச்சர் சஞ்சய் நிசாத் சட்டசபை வளாகத்தில் விதிகளை மீறி தனது காரை நிறுத்தி இருந்தார்.
‛நோ பார்க்கிங்' ஏரியாவில் அவர் விதியை மீறி தனது வெள்ளை நிற டொயொட்டா ஃபார்ச்சுனர் காரை நிறுத்திவிட்டு சட்டசபைக்கு சென்றிருந்தார். இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு இருந்த போலீசார் அமைச்சர் சஞ்சய் நிசாத்தின் கார் என்று பாராமல் ‛டோவிங்' செய்து அப்புறப்படுத்தினர்.
ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து அவரது காரை இழுத்து சென்றனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும் போலீசாரின் நடவடிக்கையை பாராட்டி வருகின்றனர்.
ஏனென்றால் பல இடங்களில் கவுன்சிலர்கள் முதல் பலரும் தவறு செய்தாலும் கூட போலீசார் நடவடிக்கை எடுக்க முடியாமல் தவிப்பார்கள். இங்கேயும் கூட அமைச்சருக்கு தகவல் சொல்லி அனுப்பி காரை வேறு இடத்தில் நிறுத்தும்படி போலீசார் கூறியிருக்கலாம். ஆனால் அதை போலீசார் செய்யாமல், சட்டசபை வளாகத்திலேயே அமைச்சரின் காரை ‛டோவிங்’ செய்து அப்புறப்படுத்தியதை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications